செவ்வாய், 15 டிசம்பர், 2015

மட்டு. அபிவிருத்திக்குழுவில் தலைவர் பதவி த.தே.கூட்டமைப்புக்கு வழங்கப்பட வேண்டும்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மாவட்டங்களில் அதிகளவு ஆசனங்களைப் பெறும் கட்சிக்கே மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் பதவி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.
இன்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பில் அமைந்துள்ள அவரது காரியாலயத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு பற்றிக் கொண்டிருப்பவர்களுக்கே, தற்போது மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுக் கொண்டு வருவதை அவதானிக்க முடிவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், மற்றும் அங்கஜன், வன்னியிலே அமைச்சர் றிசாட் பதியுதீன், மற்றும் 74 சதவீதம் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இந்த மட்டக்களப்பு மாவட்டத்திலும் கூட மாவட்ட அபிவிருத்திக்குழுவுக்குத் தலைவராக பிரதியமைச்சர் அமீரலியும்,
இணைத்தலைவர்களாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட்டும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனையும், நியமித்திருப்பதாக அறிய முடிகின்றது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவில் இணைத் தலைவராக இருக்க வேண்டிய தேவைப்பாடு இருக்காது என நான் நினைக்கின்றேன்.
மாறாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் இந்த மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவராகவும், ஏனையவர்கள் இணைத் தலைவர்களாகவும் தான் இருக்க வேண்டும் என்பதுவே நியாயமாகும்.
அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் பதவி கிடைக்காவிட்டால் இணைத் தலைவர் பதவியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நிராகரிக்க வேண்டும் என்பதுவே எனது நிலைப்பாடாகும்.
பிரதியமைச்சர் அமீரலி மாட்ட அபிவிருத்திக் குழுத் தலைவராகவும், கிழக்கு முதலமைச்சரை இணைத் தலைவராகவும், நியமிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து விமர்சனங்கள், எழுந்த பின்னர்தான், தற்போது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இணைத்தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம், காங்கிரஸ், மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகளிடமிருந்தும், விமர்சனங்கள் வரும்போது அக்கட்சிளைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவர்களாக நியமிக்கின்ற நிலமை தற்போது இந்த மாவட்டத்தில் காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இந்த அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர்களாக நியமிக்கின்ற நிலமையினை விடுத்து,
தமிழ் மக்களினால் உருவாக்கப்பட்ட இந்த ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை அபிவிருதிக் குழுவிற்குத் தலைவராக நியமித்து கிழக்கு மாகாண முதலமைச்சரை மாத்திரம் இணைத் தலைவராக நியமிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate