ஸ்ரீலங்காவின் பல அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் இராஜாங்க செயலகத்தின் ஆலோசகரான தோமஸ் சனொன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை அமரந்திபே ஹோட்டலில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த 60 வருட காலமாக ஸ்ரீலங்காவுடன் அமெரிக்கா பல்வேறு பணிகளில் இணைந்து கொண்டதையிட்டு மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்த அவர்,
தொடர்ந்தும் ஸ்ரீலங்காவின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு அமெரிக்கா உதவி செய்யவுள்ளதனை எண்ணி, தாம் பெருமிதம் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், 'விவசாய அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி, ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி, நல்லாட்சி, மனிதநேய நடவடிக்கை போன்றவை தொடர்பான நிகழ்ச்சிகள் நாடெங்கிலும் முன்னெடுக்கப்படுகின்றன.
கடந்த 60 வருடங்களில் ஸ்ரீலங்கா எட்டியுள்ள வெற்றிகளை கண்டு நாம் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்தும் அனைத்து இலங்கையர்களுக்கும் சேவை வழங்கக்கூடிய வகையில் சிறந்த சிவில் சமூகம் மற்றும் வினைத்திறன் மிக்க அரசாங்கத்துக்கு நாம் உதவுவோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் அமைந்துள்ள 2 ஆம் உலக மகா யுத்தத்தில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்துள்ள திருகோணமலை போர்க் கல்லறைக்கும் விஜயம் செய்தார்.
அங்கு அனைத்து கல்லறைகளையும் பார்வையிட்ட அவர், மலர் வளையம் வைத்து அஞ்சலியுடனான மரியாதை செய்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக