புதன், 2 டிசம்பர், 2015

கல்முனை மாநகரில் ஒரு நரகம்! கழிவுகளின் துர்நாற்றத்தின் மத்தியில் 60 தமிழ்க் குடும்பங்கள் (Photos)

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரத்தினுள் எந்நேரமும் மிகவும் மோசமான துர்நாற்றம் வீசும் ஒரு நரகம் அமைந்திருப்பதை பலர் அறிந்திருக்க நியாயமில்லை.
கல்முனை மாநகரசபை இதனைக் கண்டும் காணாமலிருக்கின்றதா? என்று கூறுமளவிற்கு நிலைமை அங்கு படு மோசமாக போய்க் கொண்டிருக்கின்றது.
இச் செய்தியைக் கேள்வியுற்றதும் எமது நிருபர் அங்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
அங்கு நின்று செய்தி எழுதவோ படம் பிடிக்கவோ முடியாத நிலையில் மூக்கைப் பொத்திப்பிடித்தவாறு நின்று பின்வரும் தகவல்களை திரட்டி அனுப்பியுள்ளார்.
அவர் தரும் நேரடி றிப்போர்ட் இது:
கல்முனை மாநகரத்தின் கிழக்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள குருந்தையடி சுனாமி மீன்குடியேற்ற மாடி வீட்டுத் தொகுதியின் மலசல கூடத் தொகுதியிலிருந்து வெளியாகிக் கொண்டிருக்கும் கழிவுநீரே இதற்குக் காரணமாகும்.
மாடி வீட்டுத் தொகுதியின் மலசலக் கூடத் தொகுதியிலிருந்து வெடித்து வெளியேறிக் கொண்டிருக்கும் கழிவுநீர் வீதியைக் கடந்து ஊர்மனைக்குள் – கல்முனை 1 டி – பிரவேசித்து அங்குள்ள கான்களுக்குள் வழிந்து ஓடுகின்றது.
மிக மோசமான துர்நாற்றத்துடன் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் இக் கழிவு நீரால் சூழவுள்ள 60 தமிழக் குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளன.
சூழல் படிப்படியாக மாசடைந்து வருகின்றன. இந்நிலைமை கடந்த 5 மாதங்களாக நிலவுகின்றது.

இத்தனைக்கும் அந்த மக்கள் முறையிடாத இடமில்லை. கல்முனை மாகநரசபை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் அனைத்திற்கும் அப்பால் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் யாருமே சற்றும் ஏறெடுத்தும் பார்க்கவில்லையென மூக்கைப் பொத்திப் பிடித்த வண்ணம் அழாக் குறையாகக் கூறுகின்றனர்.
அங்கு நின்ற குடும்பப்பெண்மணி திருமதி வனஜா சிவராஜா கைக்குழந்தையுடன் கூறுகையில்:
கடந்த 5 மாதங்களாக இந்த நரகத்தினுள் தான் நாம் உழன்று வருகின்றோம். இது பற்றி நாம் அறிவிக்காத இடமில்லை. கேட்பார் பார்ப்பாரில்லை. அதிகாரிகளும் கவனிக்கிறார்களில்லை. தேர்தல் வந்ததும் வாக்குப் பிச்சை கேட்டு ஓடி வருபவர்களும் வருகிறார்களில்லை.
கல்முனை மாகநரசபை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் அனைத்திற்கும் அப்பால் கல்முனை பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்தோம். ஒரு பயனுமில்லை.
தங்கள் ஊடகமாவது எமக்கு தீர்வு பெற்றுத் தரட்டும். என்றார்.

கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் கே.லவநாதனிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது :
இது பற்றி என்னிடம் அறிவிக்கப்பட்டவில்லை. கிராம சேவையாளரிடம் முறையிட்டிருக்கலாம். எனக்கு ஒரு முறைப்பாட்டைத் தந்தால் நான் மாகரசபையுடன் கேட்டு இப்பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்றார்.
அங்கு ஸ்தலத்தில் நின்றிருந்த சமுகசேவையாளர்களான கே.சந்திரசேகரம் ராஜன், வீ.கிருஸ்ணமூர்த்தி ஆகியோரிடம் கேட்ட போது,
நாம் இன்றுதான் இப்பிரச்சனை பற்றிக் கேள்விப்பட்டு வந்தோம். இது தொடர்பாக இங்குள்ள அதிகாரிகள் மெத்தனப் போக்கைக் கடைப்பிடித்திருப்பது வேதனைக்குரியது. இன்னும் சற்றுநேரம் நாம் இங்கு நின்றால் மயங்கி விழவேண்டிவரும். சுற்றாடல் சூழல் பாதுகாப்பு சுகாதார வைத்தியம் எல்லாம் கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்களா?
இவர்கள் தமிழ்மக்கள் என்பதால் கல்முனை மாகரசபை இந்த பாராமுகத்தை காட்டுகின்றதா? உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் இன்றேல் இப்பிரதேச மக்கள் நோய் வாய்ப்படுவதுடன் மரணத்தைக் கூட சந்திக்க வேண்டி வரும். கடந்த வாரம் நான்கரை வயதுப் பிள்ளையான மனுக்சியன் வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் 3 தினங்கள் இருந்ததாக அறிகின்றோம்.
எனவே மாகரசபையினர் சுகாதாரத்துறையினர் சூழல் சுற்றாடல் துறையினர் இதுவிடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்றேல் மாபெரும் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுக்க வேண்டி வரும். என்றனர்.
சமுக சேவையாளர் ராஜன் இன்று புதன்கிழமை கல்முனை மாநகரசபை உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ரெலோ செயலாளர் நாயகமுமான ஹென்றிமகேந்திரன் ஆகியோரிடம் முறையிட்டார்.
அங்கிருந்து மாநகரசபைஉறுப்பினர் கு.ஏகாம்பரம் தகவல் தருகையில்:
நான் மாகரசபைக்கு புதியவன். எனினும் இப்பிரச்சினை தொடர்பாக ஏலவே நான் மேயருடன் பேசியிருக்கிறேன். அது ஒரு நிறுவனம் செய்த மாடி வீட்டுத் திட்டம். எனவே அதனை அவர்கள் தான் செய்ய வேண்டும். இக் கழிவை வெளியேற்ற நிறைய செலவு தேவை. பார்ப்போம் என்று அவர் அன்று கூறினார். ஆனால் இன்று நிலைமை மோசமாகியுள்ளது. மேயர் இன்று கல்முனையிலில்லை.வந்தவுடன் கதைத்து தீர்மானிக்கலாம். என்றார்.
சமுகசேவையாளர் ராஜன் இன்று புதன்கிழமை கல்முனை மாநகரசபை உறுப்பினர் கு.ஏகாம்பரம் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரும் ரெலோ செயலாளர் நாயகமுமான ஹென்றிமகேந்திரன் சகிதம் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலாளர் கே.லவநாதனையும் கல்முனை மாநகரசபை அதிகாரிகளையும் சந்திக்கச் சென்றுள்ளார்கள்.
இச்செய்தி ஊடகங்களில் வந்த பிற்பாடாவது இம்மக்களுக்கு விடிவு கிடைக்கின்றதா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். இல்லாவிடில் செய்திப் பயணம் தொடரும்.
நேரடி றிப்போர்ட் – வி.ரி.சகாதேவராஜா-
waste
waste0
waste3
waste4
waste5
waste6
waste7
waste8
waste9
waste99
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate