வியாழன், 29 அக்டோபர், 2015

நீரிழிவு, இரத்த அழுத்தம்: பக்கவாத முக்கிய காரணிகள்

உலக பக்கவாத தினம் இன்று (29.10.2015) ஆகும். அதனை முன்னிட்டு இக்கட்டுரை பிரசுரமாகின்றது.
நோயற்ற வாழ்வே குறை வற்ற செல்வம் என் பார்கள். இது எம்முன் னோர் வாக்கு ஆகும்.
ஆனால் ஆரம்ப காலம் தொட்டே மனித சமூகத்தை தொற்றும் நோய்களும், தொற்றா நோய்களும் ஆக்கிரமித்தே இருக்கின்றன.
அந்த வகையில் உலக பக்கவாத(Stroke) தினமான இன்று இந்த பக்கவாத நோய் குறித்து கவனம் செலுத்தினால் அந்நோய் மொசப்பத்தேமியா நாகரிக காலப் பகுதியிலேயே காணப்பட்டதற்கான சான்றுகள் உள்ளன. கி.மு. 460 - கி.மு 370 காலப் பகுதியில் வாழ்ந்த கிப்ரொகிரடிஸ் என்ற அறிஞர் தம் குறிப்புக்களில் குறிப்பிட்டுள்ளார். திடீரென ஏற்படும் பக்கவாதம் தொடர்பாக உலகில் குறிப்பிட்ட முதலாவது நபர் இவரோயாவார்.
அதேநேரம் குருதிப் பெருக்கு காரணமாக பக்கவாதம் ஏற்படுவதை 1652 இல் வாழ்ந்த ஜோகன் ஜாகொப் வெப்பர் என்ற அறிஞர்தான் இனங்கண்டு உலகிற்கு அறிவித்தார்.
என்றாலும் தற்போது உலகில் இரு வகையான பக்கவாதங்கள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று குருதியோட்ட குறைபாட்டு பக்கவாதம்(Ischemic Stroke) மற்றையது குருதி பெருக்கு பக்கவாதம் (hemorrhagil Stroke)  ஆகும். இந்த பக்கவாதம் என்பது மூளை அழுத்தம் எனவும் அழைக்கப் படுகின்றது.
அதாவது மூளைக்கான இரத்தவோட்ட நாடி, நாளங்களில் ஏற்படும் அடைப்புக்கள் மற்றும் கொழுப்பு படிவுகள் காரணமாக சீரான இரத்தவோட்டம் பாதிக்கப்படும்.
இதன் விளைவாக மூளைக்கான இரத்த ஓட்டம் திடீரென குறைவடையும். இதன் காரணத்தினால் மூளைக்கலங்கள் இறக்கும். இதன் விளைவாக மூளை சீராக இயங்க முடியாத நிலைமைக்கு உள்ளாகும். இதனால் ஒன்றில் சீராக இயங்க முடியாத நிலைமை ஏற்படும் அல்லது உடலின் ஒரு பகுதி செயலிழக்கும்.
இவ்வாறான குணாம்சங்கள் வெளிப்பட்ட இரண்டொரு மணித்தியாலங்களுக்குள் பக்கவாதம் ஏற்படும்.
அதேநேரம் மூளையிலோ அல்லது மூளையைச் சுற்றியுள்ள பகுதியிலோ திடீரென ஏற்படும் இரத்தக்கசிவு காரணமாகவே குருதிப் பெருக்கு பக்கவாதம் ஏற்படுகின்றது. இதற்கு உயர்வு இரத்த அழுத்தம் முக்கிய காரணியாக விளங்குகின்றது. அத்தோடு புகைபிடித்தல் பழக்கம், தொப்பை, அளவுக்கு அதிகமான கொழுப்பு (கொலஸ்ரோல்), நீரிழிவு ஆகியனவும் பக்கவாதத் திற்குத் துணை புரிகின்றன.
இப்பக்கவாதத்திற்கு உள்ளாகின்றவர்க ளுக்கு கடும் தலைவலி ஏற்படும். அத்தோடு நியூமோனியாவும், சிறு நீர்ப்பை கட்டுப்பாட்டை இழந்த நிலைமையும் ஏற்படும். போதிலும் ஒருவர் பக்கவாதத்திற்கு உள்ளாகி இருப்பதை ஈ.ஸி.ஜி, சி.ரி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் ஆகிய பரிசோதனைகள் மூலமே சரியான முறையில் இனங்கக் கூடியதாக இருக்கும்.
பக்கவாத உயிரிழப்புக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை வருடா வருடம் உலகில் அதிகரித்து வருகின்றது. அந்த வகையில் 2013 ஆம் ஆண்டில் 64 இலட்சம் பேர் பக்கவாதம் காரணமாக உலகெங்கிலும் உரியிழந்தனர். இவர்களில் 32 இலட்சம் பேர் குருதிப் பெருக்கு பக்கவாதம் காரணமாக உயிரிழந்தனர்.
இலங்கையிலும் பக்க வாதத்திற்கு உள்ளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையில் அதிகரிப்பை அவதானிக்க முடிகின்றது என்று மருத்துவ நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்நாட்டில் தொற்றா நோய்கள் ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறி இருப்பதே இதற்கு முக்கிய காரணமாக விளங்குகின்றது.
ஆகவே உடல், உள ஆரோக்கியத்திற்கு உகப்பான வகையில் தம் செயற்பாடுகளையும் பழக்க வழக்கங்களையும் அமைத்துக் கொள்ளும் போது பக்கவாதம் உட்பட தொற்றா நோய்களை பெரிதும் தவிர்த்துக்கொள்ள முடியும் என்றும் மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். அதனால் ஆரோக்கியமான வாழ்வை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டியது ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். 
மர்லின் மரிக்கார்
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate