கிழக்கு மாகாணத்தில் இலங்கைஆசிரியர் சேவை புதியபிரமாணக் குறிப்பின் பிரகாரம் ஆசிரியர்களை உள்ளீர்க்கும் செயற்பாடு மந்த கதியில் இடம்பெற்று வருவதாக ஆசிரியர்கள் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்திடம் முறையிட்டு வருகின்றனர்.
இதுதொடர்பில் கிழக்கு மாகாணகல்விப் பணிப்பாளர் எம்.ரி.எ.நிசாமிடம் சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா கலந்துரையாடிய போது அதனை ஏற்றுக் கொண்டதோடு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுமென்று பதிலளித்தார்.
மட்டக்களப்பு பட்டிருப்பு போன்ற சில வலயங்கள் இப்பணியை பூர்த்திசெய்திருப்பதாகக்குறிப்பிட்ட அவர் பல வலயங்களில் இப்பணி தற்போது இடம்பெற்று வருகின்றது.
மிகவும் தாமதமாக உள்ள வலயங்களுக்குப் பொறுப்பானவர்களை அழைத்து உள்ளீர்ப்பு அதனோடிணைந்த சம்பள மாற்றங்கள் அனைத்தையும் விரைவாக பூர்த்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதத்திற்குள் இப்பணி பூரணமாக பூர்த்தி செய்யப்பட வேண்டுமென கல்வியமைச்சு சகல மாகாண மற்றும் வலயக்கல்விப் பணிப்பாளர்களையும் கேட்டுள்ளது.
இன்னும் பல வலயங்களில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் புதிய ஆசிரியர் சேவைப் பிரமாணத்திற்கமைவாக உள்ளீர்ப்புக் கடிதங்களையோ சம்பள மாற்றக் கடிதங்களையோ பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவான விடயங்கள்:
ஆசிரியர்களிடமிருந்து உச்சக்கட்ட சேவையை லீவு நாட்களிலும் பெறத்துடிக்கின்ற சிலவலயங்கள் ஆசிரியர் நலன்களில் அக்கறை கொள்ளாதிருப்பது வேதனைக்குரியது. ஆசிரியர்களது உரிமைகளான சம்பள மாற்றம் வருடாந்த சம்பள உயர்ச்சி போன்றன எந்தக் காரணமுமில்லாமல் மாதக்கணக்கில் தாமதிக்கப்படுகின்றன. ஆசிரியர்கள் உழைத்துப் பெறுகின்ற இச்சம்பள உயர்ச்சியை சம்பந்தப்பட்டவர்கள் அந்தந்த காலத்தில் சுயமாக வழங்க முன்வர வேண்டும். ஆசிரியர்கள் அலைந்துதிரிந்து கேட்கும்வரை தாமதிக்கக் கூடாதென்பது எமது வேண்டுகோளாகும்.
ஒருசில அதிபர்கள் ஆசிரியர்களை அடிமைகளாக கிள்ளுக்கீரையாக நினைத்து தாம் விரும்பியவாறு ஏசிப்பேசி கடமைப்பட்டியலுக்கு அப்பால் அவரின் சம்மதமின்றி கூடுதல் வேலை வாங்கி வருவதாகவும் கூடுதல் மனஉளைச்சலுக்கு உட்படுத்திவருவதாகவும் பரவலாக முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன.
அதிபர் நியமனங்களின் போது விண்ணப்பம் கோரப்பட்டமைக்குஅமைவாக தகுதிகளை நீதியாக இனங்கண்டு செயற்பட வேண்டுகின்றோம். நேர்முகப்பரீட்சைக்குழு நீதி நியாயம் தவறுமிடத்து அரசியல்வாதிகளை வலிந்து உள்வாங்குகின்ற நிலையுருவாகும். அதனை அதிகாரிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
பல தேசிய பாடசாலைகள் நிரந்தர அதிபரின்றி இயங்கிவருவதைக் காணக்கூடியதாயுள்ளது.தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் மாணவரின் கல்வி ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டு வருகின்றது என்பதை நாம் மறுக்க முடியாது.
ஆசிரியர் மற்றும் உள்வாரி வெளிவாரி மதிப்பீடு விடயங்களில் வலயத்திற்கு வலயம் வேறுபட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. எண்ணற்ற படிவங்களை வழங்கி ஆவணப்படுத்த ஆசிரியர்களை வற்புறுத்தி பயன்படுத்தி வருகின்றனர். பொதுவாக மதிப்பீடுகளின் பின்னூட்டல்கள் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. எண்ணிக்கையை கணிப்பிடுகிறார்களே தவிர அவை தரமான வினைத்திறன் மிக்க மதிப்பீடுகளா என்படிதில் கவயம் செலுத்துவதாக இல்லை.
கணிதம் விஞ்ஞானம் போன்ற முக்கிய பாடங்களிற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் அல்லது அதனை நிறைவேற்றுகின்றவர்கள் குறைந்தபட்சம் பட்டதாரிகளாவது இருக்கவேண்டும் என கல்வியமைச்சு எதிர்பார்க்கின்றது. இதனை கல்விஅதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியதவசியமாகின்றது.
தரமான கல்வியை நோக்கிய கல்விப்பயணத்தில் ஆசிரியர்கள் முக்கிய கதாபாத்திரங்கள் என்பதை அனைவரும் மறந்து விடக் கூடாது என்பதை ஞாபகப்படுத்தவிரும்புகின்றோம்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக