திங்கள், 26 அக்டோபர், 2015

கருணா தமிழர் விடுதலை கூட்டணியில் இணைவு? ஆனந்த சங்கரி மறுப்பு

கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தான் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் அக் கட்சியுடன் சேர்ந்து போட்டியிடவுள்ளதாகவும் இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை அடுத்த மாதம் வெளியிடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்த விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா, மகிந்த அரசுடன் இணைந்து செயற்பட்டார். கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது கருணாவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிடுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. அத்துடன் கடந்த காலங்களைப் போன்று தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்ற ஆசனமும் வழங்கப்படவில்லை.
இவ்வாறானதொரு நிலையிலேயே, விநாயகமூர்த்தி முரளிதரன் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரன் மேலும் தெரிவிக்கையில், தமிழர் விடுதலைக் கூட்டணி பாரம்பரியக் கட்சி. தமிழர்களின் தாய்க்கட்சி. தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் 4 கட்டப் பேச்சுக்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளன.
தமிழர் விடுதலைக் கூட்டணியான பாரம்பரியக் கட்சியைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது. போர் காரணமாக அந்தக் கட்சியில் சில பிளவுகள் ஏற்பட்டிருந்தன. அதனால் கட்சியை மீளக்கட்டியெழுப்ப வேண்டியுள்ளது. சிங்களக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு நான் இனித் தயாரில்லை. அதனால் உள்ளுராட்சித் தேர்தலின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளோம் என தெரிவித்தார்.
இது தொடர்பாக வீ. ஆனந்தசங்கரியிடம் கேட்டபோது அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனக் குறிப்பிட்டார். அவர் என்னுடன் பேசினார் ஆனால் இதுவரை கட்சியில் இணைந்து கொண்டதாக இல்லை எனவும் கூறினார். 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate