வெள்ளி, 30 அக்டோபர், 2015

புலம்பெயர் அமைப்பின் நிதியுடன் மட்டக்களப்பில் மாவடி ஆறு அணைக்கட்டு

 புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஊடாக அவுஸ்திரேலிய உதவியின் நிதியில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் நிர்மாணிக்கப்பட்ட வவுணதீவு மண்முனை மேற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடி ஆறு அணைக்கட்டு வியாழக்கிழமை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி.றொபின் முட்டேயினால் திறந்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி.றொபின் முட்டே மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டார்.
 5.2 மில்லியன் செலவில் அமைக்கப்பட்ட இந்த அணைக்கட்டின் மூலம் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவின் இலுப்படிச்சேனை பிரதேசத்தின் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் வயல் நிலங்களில் வேளாண்மை செய்கை பண்ணக் கூடியதாக இருப்பதுடன், இப்பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பும் தவிர்க்கப்படும்.
 நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.கிரிதரன், மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் பொறியிலாளர் என்.சிவலிங்கம், அவுஸ்திரேலியாவின் இலங்கை மற்றும் மாலை தீவுக்கான கவுன்சிலர், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதி குஸ்ப்பி குரோசிற்றி, மண்முனை மேற்கு பிரதேச செயலக உதவித்திட்ட மிடல் பணிப்பாளர் எஸ்.நிர்மல்ராஜ், மாவட்ட செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.சுதர்சன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.ஜெயராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
 6 கதவுகளைக் கொண்டதாக 12 மீற்றர் நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவடி ஆறு அணைக்கட்டின் ஊடாக தாந்தாமலை, கண்டியனாறு, நல்லதண்ணியோடை, அடைச்சகல் ஆகிய குளங்களின் வடிச்சல்களின் நீர் வேறு பிரதேசங்களுக்கு செல்கிறது.
 அணைக்கட்டினைத் திறந்து வைத்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் திருமதி.றொபின் முட்டே அப்பிரதேச மக்களுடனும் கலந்துரையாடினார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate