சர்வதேச வெள்ளை பிரம்பு தினம் இன்று
பார்வை இழப்பு என்பது இன்று நேற்றல்ல, மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே மனித குலத்தை பீடித்து வருகின்ற ஒரு பிரச்சினையாக உள்ளது. குண மாற்றுச் சிகச்சை மேற்கொள்ளப்படுகின்ற இந்த விஞ்ஞான யுகத்தில் கூட இந்த பார்வை இழப்பை முற்றாக தடுத்து நிறுத்த யாராலும் முடியவில்லை. அத்தோடு அவரது வாழ்வு முடிந்துவிட்டது என்று கருதிய ஒரு காலமும் உண்டு.
ஆனால் இன்று பார்வை இழப்பு ஒருவரின் வாழ்வு முன்னேற்றத்துக்குத் தடையில்லை என்பது பலவற்றாலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. உரிய வாய்ப்புகள். வசதிகள் முக்கியமாகக் கல்வி வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் பார்வையற்றவர் களாலும் சிறப்பாக கெளரவமாக வாழ முடியும், அகக் கண்களால், அறிவுக் கண்களால் இவ்வுலகைத் தரிசித்து, அதன் போக்குகளுக்குத் தன்னை இயைபாக்கி கொள்ளவும் முடியும்.
பார்வைக் குறைபாடுள்ள பிள்ளைகளின் கல்வித் தேவைகள். அவர்களின் பார்வை இழப்பின் தன்மையைப் பொறுத்ததாகும். பார்வைக் குறைபாட்டினை பிரதானமாக இரண்டு வகைப்படுத்தலாம்.
1. பகுதி அளவான பார்வைக் குறைபாடு
2. முழுமையான பார்வைக் குறைபாடு
பகுதியளவான பார்வைக் குறைபாடு டையோர் யாரெனில் இவர்களுக்கு பார்வையில் தெளிவு இருக்காது. எந்தப் பொருளையும் தெளிவாகப் பார்க்க மாட்டார்கள். இவர்களின் பார்வையின் இயல்புகளை வைத்தே இவர்களை இனங்கண்டு கொள்ளலாம்.
ஆனால் முழுமையான பார்வைக் குறைபாடுடைய பிள்ளைக்கு தான் வாழுகின்ற சுற்றுப்புறச் சூழலையோ அல்லது ஓர் பொருளையோ இனங்கண்டு கொள்வதில் முழுமையான பிரச்சினை காணப்படும். இவர்கள் சாதாரண பிள்ளைகளைப் போல கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடமாட்டார்கள். மாறாக விசேட கற்றல் உபகரணங்களை கையாண்டே கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடுவர்.
பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளை அவதானிப்போமாயின்
1. நடமாடுதல் தொடர்பான பிரச்சினை
2. கிடைக்கும் அனுபவங்களின் எண்ணிக்கையும் வகைகளும் குறைவாக காணப்படுதல்
3. சூழலை அறிந்து கொள்வதில் ஏற்படும் சிக்கல் நிலை என்பவற்றைக் குறிப்பிடலாம்.
ஒருவருக்கு பார்வைக் குறைபாடு ஏற்படுவதாயின் அவரில் பின்வரும் அறிகுறிகள் தென்படும்.
1. கண் அல்லது கண் இமை சிவப்பாக இருத்தல். கண்ணில் இருந்து தொடர்ச்சியாக கண்ணீர் வடிதல்.
2. கண் சோர்வுற்றுக் காணப்படுதல், கண்ணில் சுருக்கம் விழுதல் அல்லது கண் தெளிவில்லாமல் காணப்படுதல்.
3. கண்ணின் மையப் பகுதி சாம்பல் அல்லது கறுப்பு நிறத்தில் காணப் படுதல்.
4. ஒரு விழி மற்றொரு விழிக்கு வித்தியாசமாக விலகியிருத்தல்.
5. பொருட்களைப் பார்க்கும் போது கண்களை சுருக்கிப் பார்த்தல்.
6. வண்ணப் பொருட்களின் மீது அக்கறை காட்டாது இருத்தல் அல்லது அதனை முகத்துக்கு அருகில் கொண்டு வந்து பார்த்தல்.
7. சூரியன் மறைந்ததற்குப் பின் பொருட்களைப் பார்க்க சிரமப்படல்
8. வகுப்பறையில் ஆசிரியர் எழுதுவதனைக் கவனிக்க பார்த்து எழுத முடியாத நிலை. எனவே இவ்வாறான அறிகுறிகள் காணப்படுவோரை கண் பார்வைக் குறைபாடுடையோர் என அடையாளப்படுத்தலாம்.
அடுத்து நாம் பார்வைக் குறைபாடு டையோரின் நடத்தைப் பாங்குகள் பற்றிப் பார்ப்போம்.
1. அவர்கள் தனிமையை விரும்புவார்கள்.
2. பயத்தினால் ஒதுங்கி இருப்பர்.
3. சூழ்நிலையை அறிந்துகொள்ள முடியாமல் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப நடந்துகொள்ள முடியாது இருப்பர்.
4. தாழ்வு மனப்பான்மை ஏற்படல்.
5. சகபாடிகளுடன் கூட்டாகச் செயற்படாமல் ஒதுங்கி இருத்தல்
6. தாமாக முன்வந்து எதனையும் செய்யத் தயங்குதல்
7. பிறர் உதவியோடு கற்றல் செயற்பாடுகளில் ஈடுபடல் போன்ற பல வகையான நடத்தை மாற்றங்களை காட்டுவர்.
இனி நாம் பகுதியளவான பார்வைக் குறைபாடு உடையவர்களின் கல்வித் தேவைகள் பற்றி ஆராய்வோம்
இவ்வகைப் பிள்ளைகள் பொருட்களை கூர்ந்து பார்க்கத் தூண்டுதல் வேண்டும். பார்வையை பயன்படுத்தத் தூண்டுவதற்கு பல வகையான பொருட்களை பயன்படுத்த முடியும். இப்பொருட்கள் பல்வேறு வண்ணங்களில் இருப்பது அவசியமாகும்.
உற்று நோக்கும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதனால் பொருட் களின் வடிவம் மற்றும் அளவுகளை அறிந்து கொள்ளக்கூடியதாய் இருப்பர்.
உதாரணமாக,
ளி, லி என்பவற்றின் வேறுபாட்டை அறிதல்
ஜ, ஐ என்பவற்றின் வேறுபாட்டை அறிதல்.
அளவு வடிவம் போன்றவற்றில் எந்தப் பொருள் மாதிரியாக உள்ளன. இவை வேறுபடுகின்றன என்று அறிய வைத்தல் அவசியமாகும். இவர்களுக்கு சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் பொருட்களைப் பார்ப்பதற்கும் கையாள்வதற்கும் வாய்ப்புக்கள் அளிக்கப்படல் வேண்டும்.
மேற்கூறியவாறு பகுதியளவு பார்வைக் குறைபாடு உடைய குழந்தைகளின் பார்வைத் திறனை வளர்ப்பதற்காக ஆசிரியர்களும் பெற்றோர்களும் பெரும் பங்களிப்பை செலுத்த வேண்டியுள்ளனர். எனவே அவர்களுக்கு கீழ்வரும் பயிற்சிகளை கையாள முடியும்.
1. பொருட்களை பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுதல்.
2. கவனத்தை ஈர்க்கத்தக்க வகையில் பொருட்களை உருவாக்கி கையாளவிடல்
3. பொருட்களை வரைந்து அதில் பிள்ளைகளின் விரல் நுனியை வைத்து நகர்த்திக் கொண்டே வரச் செய்தல்
4. பொருட்களை அடையாளம் காணவிடல்
5. பார்த்தவற்றை நினைவுகூரும் திறனை வளர்த்தல்
6. பார்வை ஒருங்கிணைப்புக்கான திறனை அளித்தல்.
உதாரணம் : களி மண்ணால் பொருட்களைச் செய்தல் புள்ளிகளை வைத்து அதன் மீ கோடுகளை வரைதல்.
7. பார்வை - இயக்கம் ஒருங்கிணைப் புக்கான பயிற்சி.
1) கண்ணும் கையும் ஒருங்கிணைத்தல்
ஒருவர் பந்தை எறிய மற்றவர் அதனைப் பிடித்தல்
கரம்போர்ட் விளையாட்டு.
2) கண்ணும் காலும் ஒருங்கிணைத்தல்
காற்பந்து விளையாட்டுக்கள்
எனினும் குறிப்பிட்ட மாணவனுக்கு இச்செய்றபாடுகளை வழங்கும் முன்னர் மாணவனை வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களை வகுப்பறைச் செயற்பாடு களுக்கு உட்படுத்தும் போது இவர்களை வகுப்பறையில் முதல் வரிசையில் உட்கார வைத்தல் வேண்டும். கரும்பலகையில் கறுப்பு நிறத்துக்குப் பதிலாக ஏதாவது இளம் நிறம் இருப்பது நன்று, பயன்படுத்தும் வெண்கட்டி பிரகாசமான நிறத்தில் முக்கியமானதாகும்.
பகுதியளவு பார்வைக்குறைபாடு உடைய குழந்தைகள் கற்பதற்கு வகுப் பறையில் போதிய வெளிச்சம் ஏற்படுத்தி கொடுத்தல் அவசியமாகும்.
இவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்களாவன :
1. உருப்பெருக்குக் கண்ணாடி வைத்திய ஆலோசனையின் மூலம் இக்கண்ணாடியைப் பயன்படுத்துவதால் பெரிதாக பார்க்க முடியும்.
2. புத்தகத் தாங்கிகள்
பிள்ளைகளின் கண்ணுக்கு நேராக புத்தகங்களை வைத்துப் படிக்கக்கூடிய புத்தகத் தாங்கிகள் பயனுடையதாய் இருக்கும். புத்தகங்களை செங்குத்தான நிலையில் வைக்கக்கூடியதாக இருத்தல் வேண்டும்.
3. ஒலிப்பதிவு நாடாக்கள் இவைகள் பேசும் புத்தகங்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன.
இவ்வாறு பகுதியளவு பார்வைக் குறைபாடு உடைய பிள்ளைகளை இனங்கண்டு அவர்களின் தேவைக்கேற்ப வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல் ஒரு ஆசிரியரின் கடமையாகும்.
அடுத்து நாம் பார்வைக் குறைபாடு என்ற அம்சத்தின் அடுத்த பெரும் பிரிவான முழுமையான பார்வைக் குறைபாடு உடையோர்கள் பற்றி இனி நாம் ஆராய்வோம். ஒருவரால் சுற்றுப்புறச் சூழலில் காணப்படுகின்ற எப்பொருளை யும் முழுமையாக பார்க்க முடியாத நிலை இதுவாகும்.
ஒருவருடைய அறிவின் நுழைவாயிலாகக் கருதப்படுவது ஐம்புலன்களாகும். இதில் கண் என்ற புலன் பாதிக்கப்படும் போது மிகுதியாகவுள்ள நான்கு புலன்களுக்கும் அதிகளவு பயிற்சி வழங்கப்படுதல் வேண்டும்.
எனவே முழுமையாக பார்வைக்குறை பாடு உடைய பிள்ளைகளுக்கு அளிக்கப்பட வேண்டிய முக்கிய பயிற்சிகளாவன.
1. பிறைல் முறையைப் பயன்படுத்தி எழுதுவதற்கான பயிற்சி
2. சுற்றுப்புறச் சூழலை அறிவதிலும், இடம்விட்டு இடம் இடம்பெயர்வ திலும் பயிற்சி.
3. அன்றாட வாழ்க்கைக்கு வேண்டிய செயல்களைச் செய்வதில் பயிற்சி.
4. புலன்களை ஒருங்கிணைப்பதற்கான பயிற்சி
மற்றும் இவர்களுக்கு பழக்க வேண்டிய முக்கிய செயற்பாடுகளாக
1. உணவு உட்கொள்ளும் போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறை கள்
2. கடைகளுக்குச் சென்று தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்வதற்கான பயிற்சி
3. தனது பொருட்களைப் பாதுகாப்ப தற்கான பயிற்சி
4. நாணயம், தொலைபேசி என்பவற் றைப் பயன்படுத்துவதற்கான பயிற்சி
5. வெள்ளைப் பிரம்பினைப் பயன்படுத்தி நடை பழகுதல் என்பவற்றைக் குறிப்பிடலாம்.
இவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களை நோக்குவோமாயின் பார்வைக் குறைபாடுடைய பிள்ளைகளுக்கு தேவையான கற்றல் சாதனங்களானது அவர்களின் வயது தரத்திற்கேற்றவாறு அமைதல் வேண்டும். அவற்றுள்
1. பிறைல்
இது முழுமையான பார்வைக்குறைபாடு உள்ளவர்கள் தடவி வாசிப்பதற்கான ஓர் எழுத்து வடிவமாகும். இது ஆறு புள்ளிகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் முறையாகும்.
2. கிறன்மா அபகஸ்
இது சாதாரணமாக மணிக்கட்டம் போன்ற அமைப்பினைக் கொண்டது. இது ஓர் சிறந்த எண் கணிதக் கருவி இதனை விழிப்புலனற்றவர்கள் பயன்படுத்துகின்றனர். எனினும் இது அவர்களுக்கு மட்டும் உரியதல்ல. இன்று ஜப்பானிலே 90 வீதமான வியாபாரக் கணிப்புகள் அபகஸ் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது.
அபகஸ் என்பது மலிவான கையடக்கமான கையாள இலகுவான ஓர் சாதனமாகும். இதனைப் பயன்படுத்தி கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல், தசமம், பின்னம், வர்க்கமூலம் போன்றவற்றிற்கான தீர்வைகளை வேகமாக மேற்கொள்ள முடியும்.
3. ஒலிப்பதிவு நாடா
ஒலிப்பதிவு செய்ய வசதிகளுடன் ஒலிப்பதிவு நாடாக்களும் காணப்படல் வேண்டும். இது பேசும் புத்தகங்களாக இன்று பயன்படுத்தப்படுகின்றன. பிறைல் புத்தகங்கள் போதுமான அளவில் கிடைப்பதில்லை. எனவே சாதாரண புத்தகத்தில் உள்ளவற்றை ஒலிப்பதிவு நாடாவில் பதிவு செய்து அதனை மாணவர்கள் செவிமடுக்கச் செய்யலாம்.
4. பிறேயில் சிலேட்டு
5. பிறேயில் எழுதுகருவி என்பன சிலவாகும்.
எனவே மேற்சொன்ன விடயங்களை கருத்திற் கொண்டு இம் மாணவர்களையும் சக மாணாக்களாக நினைத்து அவர்களது வாழ்வை ஒளி பெறச் செய்வது சமூகத் தின் கடமையாகும்.
எப். ரூமா ரியாழ், ஆசிரியை,
0 facebook-blogger:
கருத்துரையிடுக