வெள்ளி, 2 அக்டோபர், 2015

படிக்காத மேதை பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்று

கறுப்பு காந்தி என அன்போடு அழைக்கப்படுகின்ற பெருந்தலைவர் காமராஜரின் நினைவு தினம் இன்றாகும்.
படிக்காத மேதை என அனைவராலும் போற்றப்படும் காமராஜர், எளியவர்களுக்கும் கல்வி சாத்தியமானது என்பதை உலகிற்கு பறைசாற்றினார்.
1903 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15 ஆம் திகதி காமாட்சி என்ற இயற்பெயரைக் கொண்ட காமராஜர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாளுக்கு புதல்வராக இந்தியாவின் விருதுநகரில் காமராஜர் பிறந்தார்.
பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத காமராஜர் தனது மாமாவின் துணிக்கடையில் இளம் பருவத்தைக் கழித்தார்.
இதன்போது தேசத்தலைவர்களினது பேச்சுக்களிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஈர்க்கப்பட்ட பெருந்தலைவர், தனது 16 ஆவது வயதில் காங்கிரஸின் உறுப்பினராக அரசியல் நீரோட்டத்தில் இணைந்தார்.
விடுதலைப் போராட்டங்கள் – சிறைவாசம் என தனது வாழ்நாளை இந்திய தேசத்திற்காக அர்ப்பணித்த காமராஜர், தமிழக முதல்வரானதும் தனது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினார்.
தமது மக்களுக்காகவும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கை வளம்பெறவும் பல்வேறு திட்டங்களை தீட்டினார் பெருந்தலைவர்.
அதன் விளைவு, பணக்காரர்களுக்கு மாத்திரம் பறிக்கக்கூடியதாகவும் எளியவர்களுக்கு எட்டாக்கனியாகவுமிருந்த கல்வியை இலவசமாக பெற்றுக்கொடுத்தார்.
பள்ளி மாணவர்களுக்கு இலவச மதிய உணவு, இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கியதுடன் எல்லா பிள்ளைகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக பாடசாலை சீருடையையும் அறிமுகப்படுத்தினார் அந்த மாமேதை.

புதியதொரு இந்தியாவிற்கு வித்திட்டு புதியதொரு ஆரம்பத்தை ஏற்படுத்திய இலவசக் கல்வியின் தந்தை பெருந்தலைவர் காமராஜர் 1975 ஆம் ஆண்டு இதேபோன்றதொரு நாளில் இயற்கை எய்தினார்.
எளிமையாக வாழ்ந்து அனுபவக் கல்வியின் ஊடாக அரசியலிலும் கல்வியிலும் மாற்றத்தை ஏற்படுத்திய இந்தத் தென்னாட்டு காந்தி எடுத்தியம்பிய தன்னலமற்ற பொதுவாழ்வுப் பயணத்தை எவராலும் மறக்க முடியாது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate