எனது கணவர் கோணேஸ் சிறையில் வாடுகிறார். நான் எமது 4வயது மகன் கவிந்தனுடன் வீட்டில் வாடுகின்றேன். திங்கட்கிழமை கல்முனை மேல்நீதிமன்றிற்குக் கொண்டு வந்தார்கள். அவரது கோவை சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாம். அதனால் வழக்கு மீண்டும் நவம்பர் 11ஆம் திகதி நடைபெறும் என்றார்கள்.
இவ்வாறு திருக்கோவில் வினாயகபுரத்தைச்சேர்ந்த பூபாலபிள்ளை கவிதா வயது 36 தனது கணவருக்கு நடந்த கதி பற்றி நம்பிக்கைஒளியின் கிழக்குப்பிராந்திய இணைப்பாளர் கே.ஜெயசிறிலிடன் தெரிவித்தார்.
கவிதா தற்சமயம் தனது மகனுடன் கஸ்டப்படுதாகவும் சிறுகடையொன்றின் மூலமாக தமது சீவியத்தை நடத்திவருவதாகவும் கூறினார். அவரது கஸ்ட்டநிலையை கருத்திற்கொண்டு நம்பிக்கைஒளி ஸ்தாபனம் அவருக்கு உதவ முன் வந்துள்ளது.
அவர் தமது கணவர் பிடிபட்டு தடுத்துவைக்கப்பட்ட விதம் பற்றி இணைப்பாளர் ஜெயசிறிலிடம் மேலும் தெரிவிக்கையில்:
2008இல் இராணுவத்திடம் சரணடைந்த எனது கணவர் பரம்சோதி கோணேஸ் வயது 36 இருவருடத்தின்பின் 2010.10.26இல் வீட்டில் ஒப்படைக்கப்பட்டார். மீண்டும் 2012.11.15இல் கொழும்பிலிருந்து வந்த புலனாய்வுப்பிரிவினர் 4ஆம் மாடிக்கு கொண்டுசென்றனர்.
பின்பு 2013.01.28 இல் பொத்துவில் நீதிமன்றில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டார்.
கடந்த ஒன்றரை வருட காலமாக கல்முனை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறது. ஒவ்வொரு தவணைக்கும் அவரை மன்றுக்குக்கு கூட்டி வந்து கொண்டு செல்வார்கள்.
அவர் விடுவிக்கப்படும் நாளன்றுதான் எனக்க விடுதலை. அதுவரை எனது கஸ்டம் தொடரும். சிறையில் விசாரணையின்றி வாடும் எனது கணவர் போன்ற தமிழ்க்கைதிகளுக்காக குரல்கொடுத்து ஆதரவு நல்கிவரும் அனைவருக்கும் நன்றிகள். ஜனாதிபதியின் செய்தி நம்பிக்கையூட்டுவதாக அமைந்துள்ளது. என்றார்.
ஐ.சி.ஆர்.சி முன்னிலையில் சரணடைந்த மகன் 7வருடம் சிறையில்,
திருக்கோவில் கிராமத்தைச் சேர்ந்த தியாகராசா சரஸ்வதி வயது 55 கூறுகையில்:
எனது 32வயதான அருமை மகன் ராசலிங்கம் பார்த்திபனை 2009இல் ஜ.சி.ஆர்.சி.முன்னிலையில் ஒப்படைத்தேன். இன்னும் வீடுவந்து சேரவில்லை.
கடந்த 7வருடமாக சிறையில் வாடுகிறார். நாம் இங்கே வாடுகின்றோம்.
பூசாவில் 4வருடங்கள் அம்பாந்தோட்டை மொனராகலை என்று பல சிறைகளில் வைக்கப்பட்டு தற்சமயம் மட்டக்களப்பு சிறைச்சாலையில் 4மாதகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.வழக்கு அம்பாந்தோட்டையில் 16ஆம் திகதி நடைபெறும்.
எனது கணவர் வயசாளி. கூலிவேலை செய்பவர். எமது ஏனைய 3பிள்ளைகளும் திருமணம் செய்துகொண்டு சென்றுவிட்டார்கள். நாம் தனியே அல்லல்படவேண்டியிருக்கிறது.
எனது மகனைக் காணும் வரை எனக்கு நிம்மதியில்லை. சிறையில் விசாரணையின்றி வாடும் தமிழ்க்கைதிகளை விடுவிக்கும் உண்ணாவிரதிகளோடு நாமும் கைகோர்க்கவுள்ளோம். செத்தாலும் பரவாயில்லை. என்றார்.
காரைதீவு நிருபர்-
0 facebook-blogger:
கருத்துரையிடுக