கிழக்கு மாகாணத்தில் கடந்த காலத்தில் வழங்கப்பட்டுள்ள அரச தொழில் நியமனங்களில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை விட அதிகளவான தொழில் வாய்ப்புக்கள் அரச திணைக்களங்களில் வழங்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையால் தெரிவிக்கப்படுகின்றது.
இதனை காரணம் காட்டி அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் கோரிக்கைகளையும் – உண்ணாவிரத போராட்டங்களையும் கொச்சைப்படுத்தி தட்டி கழிப்பதற்கு முயற்சிக்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் எம்.திலீபன் தெரிவித்தார்.
கடந்த 7 ஆவது நாட்களை கடந்தும் அரசியல்வாதிகள் தேர்தல் காலங்களில் வீடுகளுக்கு வாக்கு கேட்டு வந்தவர்கள் கூட நாங்கள் பட்டப்படிப்பை முடித்து வீதியில் வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் பசியுடன் போராடிக் கொண்டிருக்கும் வேளையில் யாரும் தமக்கு நியாயம் பெற்று தர வரவில்லை எனவும் கண்ணீர் வடித்த வண்ணம் பட்டதாரி ஆசிரியர்கள் தங்களின் ஆதங்கங்களை வெளிப்படுத்தினர்.
தமிழ் பட்டதாரிகளாகிய நாங்கள் தொடர்ந்தும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பட்டதாரிகளுக்கு (05-10-2015) திங்கட்கிழமை கிழக்கு மாகாண சபை நேர்முகப் பரீட்சையை நடாத்தியது. இன்னும் தமிழ் பட்டதாரிகள் கண்ணீர் வடிப்பதை கிழக்கு மாகாண சபை வேடிக்கை பார்ப்பதாகவும் இதன் மூலம் அறிய முடிவதாகவும் பாதிக்கப்பட்ட பட்டதாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதே வேளை, சுழற்சி முறையினான இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக இதுவரையில் 11 பேர் உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளனர். தமது சுயவிருப்பத்தின் பேரில் வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய பட்டதாரிகள் மீண்டும் போராட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
குறிப்பாக சரியான தீர்வு கிடைக்காவிட்டால் சாவும் வரை உண்ணாவிரதபோராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் பட்டதாரிகள் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக