ஞாயிறு, 4 அக்டோபர், 2015

ஐந்தாவது நாளாகவும் தொடரும் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம்

அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்  வேலையற்ற பட்டதாரிகள்  வேலை வாய்ப்பு உட்பட 3 அம்சக் கோரிக்கைகளை முன்  வைத்து கிழக்கு மாகாண சபை க்கு முன்பாக  ஆரம்பித்துள்ள  உண்ணாவிரத போராட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை 5வது நாளாகவும் தொடருகின்றது.


சுழற்ச்சி முறையிலான இந்த உண்ணாவிரத போராட்டம் காரணமாக
10 பேர் வரை  உடல் சோர்வு மற்றும் மயக்கம் காரணமாக
திருகோணமலை அரசாங்க வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றும் வெளியேறியுள்ளனர்..

தமது சுய விருப்பத்தின்  பேரிலே  வைத்தியசாலையிலிருந்து வெளியேறிய இவர்கள் மீண்டும் போராட்டத்தில்  இணைந்துள்ளதாக அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் தலைவரான எம். திலீபன் தெரிவிக்கின்றார்.

அம்பாரை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் அம் மாவட்டத்தை சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டுள்ளார்கள்.

மாகாண சேவையில் சகல பட்டதாரிகளுக்கும் தொழில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

2013ம் ஆண்டில்   அபிவிருத்தி  அலுவலகர்  போட்டிப் பரீட்சையில் தெரிவாகும் தகுதியை பெற்றிருந்த பட்டதாரிகளுக்கும் நியமனம் வேண்டும்.

அம்பாரை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் வேலை வாய்ப்புகளில் புறக்கணிக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும் ஆகிய  கோரிக்கைகளை முன் வைத்தே அம் மாவட்ட பட்டதாரிகள் இந்த போராட்டத்தில்  ஈடுபட்டுள்ளார்கள்.

2013ம் ஆண்டு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் போட்டிப் பரீட்சையில் தமிழ் பட்டதாரிகள் கூடிய புள்ளிகளை பெற்றிருந்தும் இன ரீதியாக நியமனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்படடுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் பட்டதாரிகள்   கவலையும் விசனமும் வெளியிட்டனர்.

தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள  பட்டதாரிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர்  ஹாபீஸ்  நசீர் அஹமட் 3வது நாள் சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.

அவர் சில உறுதிமொழிகளையும் உத்தரவாதங்களையும் வழங்கி உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டிருந்த போதிலும் அதனை பட்டதாரிகள் நிராகரித்து தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன்.

இது போன்ற உறுதிமொழிகளும் உத்தரவாதமும் ஐந்து மாதங்களுக்கு முன்னரும் தங்களுக்கு  வழங்கப்பட்டதாக அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.

பட்டதாரிகளினால் முன் வைக்கப்பட்டுள்ள வேலை வாய்ப்பு தொடர்பான கோரிக்கையும் போராட்டமும் நியாயமானது என ஏற்றுக் கொள்வதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

தான் அவர்களுடன் 3 தடவைககள் பேச்சுவார்த்தை நடத்தி மாகாண சபையின் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியுள்ளதாகவும் கூறும் அவர,; மேலும் தெரிவிக்கையில்

கிழக்கு மாகாண சபையிலுள்ள தினைக்களின் ஆளணி விபரங்கள் மற்றும் வெற்றிடங்கள் போன்றன திரட்டப்பட்டுள்ளன.

அவை முகாமைத்துவ சேவை தினைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் கிடைத்தவுடன் வெற்றிடங்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட் திரட்டல் இடம் பெறும்.

பட்டதாரிகள் வேலை வாய்ப்பு மாகாண சபையுடன் மட்டும் தொடர்புடையது அல்ல. மத்திய அரசுடனும் தொடர்புடையது என்பதால் இதற்கான கால எல்லையை ஊகித்துக் கூற முடியாது என்றாலும் மாகாண சபையை பொறுத்தவரை துரிதப்படுத்த வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றது என்றார்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate