“சஹசக் நிமெவும்' புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய கண்காட்சி 2015 செப்டெம்பர் மாதம் 26,27,28 ஆம் திகதிகளில் இலங்கை கண்காட்சி மற்றும் சம்மேளன நிலையத்தில் இடம்பெற்றது.
இக்கண்காட்சியில் மகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மட்டக்களப்பைச் சேர்ந்த தங்கவேல் சக்திக்குமார் அவர்களின் ஒன்பது கண்டுபிடிப்புகளும் காட்சிக்காக வைக்கப்பட்டதுடன் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இக் கண்காட்சியில் அதிகூடிய எண்ணிக்கையிலான கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்திய ஒருவராக இவர் திகழ்கிறார். இக் கண்காட்சியில் இவரால் கண்டுபிடிக்கப்பட்ட சந்தணக்குச்சி தயாரிக்கும் இயந்திரம். கற்பூரம் தயாரிக்கும் இயந்திரம், பைட்ஸ் தயாரிக்கும் இயந்திரம். டோனர் சிப்பை மீள தயாரிக்கும் இயந்திரம், மூலிகை அரிசி, மூலிகை தேயிலை, மூலிகை பொரி, மீன் இரை, போத்தல்களில் அச்சுப்பதிக்கும் இயந்திரம், ஆகிய இவரது கண்டுபிடிப்புக்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
இதில் மூலிகை அரிசி, மூலிகை தேயிலை, மூலிகைபொரி ஆகியன இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு விசேட பயனளிக்கும் முறையில் சித்தர் பாடல்களில் இருந்து எடுக்கப்பட்ட விசேட மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற “சஹசக் நிமெவும்| புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான தேசிய கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புகளான இயற்கை கிருமிநாசினி, தக்காளிச் செடியில் குளோனிங் தொழிநுட்பம், காலினால் இயக்கும் சந்தணக்குச்சி இயந்திரம், நவீன ரப்பர்ஸ்டாம் தயாரிக்கும் இயந்திரம் என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன் அந்தவருடத்தில் அதிகூடிய எண்ணிக்கையிலான கண்டுபிடிப்புக்களை காட்சிப்படுத்தியவர் என்ற பெருமையையும் பெறுகிறார்.
இவர் தேனீ என்னும் கலை இலக்கிய சஞ்சிகையை 1989ம் ஆண்டிலிருந்து இன்று வரை வெளியிட்டுவருகிறார்.
அத்துடன் 2013 ஆம் ஆண்டிலிருந்து விஞ்ஞானி என்னும் தொழிநுட்ப சஞ்சிகையை வெளியிட்டுவருகிறார். இவர் சுயதொழில் மற்றும் முகாமைத்துவம் சார்ந்த பயிற்றுவிப்பாளராக கடமையாற்றிவருகிறார்.
தொழிநுட்ப பயிற்சிகளான பால்பதனிடல், உணவுபதனிடல், கழிசார் உற்பத்திகள், தும்புசார்உற்பத்திகள், பனையோலைசார் உற்பத்திகள், பிரம்புசார்உற்பத்திகள், சிறட்டை கைவேலைகள், கற்பூரம் தயாரித்தல், சந்தனக்குச்சி தயாரித்தல், மெழுகுதிரி தயாரித்தல், பற்றிக், ஸ்கிரீன்பிரிண்டிங் போன்ற பயிற்சிகளையும் முகாமைத்துவம் சார்ந்த வியாபாரத்திட்டம் தயாரித்தல், இயலளவைக் கட்டியெழுப்புதல், தொழிற்திறன்காண் பயிற்சிகள், தொழில் ஆலோசனை வழிகாட்டல் போன்ற இன்னோரன் பயிற்சிகளையும் வழங்கி வருகிறார்.
இவர் இதுவரை மூலிகை விஞ்ஞானி, சமூக விஞ்ஞானி, பல்துறைசார் பயிற்றுவிப்பாளர் ஆகிய விருதுகளைப்பெற்றுள்ளார். இவர் தனது கண்டுபிடிப்புகளை வர்த்தக மயப்படுத்துவதற்காக அவற்றை உற்பத்தி செய்யவதற்கான சில இயந்திரங்களை கொள்வனவு செய்வதில் மூலதன மட்டத்தில் சில பற்றாக்குறையை கொண்டுள்ளார்.
நமது பிரதேசத்தைச் சேர்ந்த பல்துறை ஆளுமை உள்ள இவரின் திறமைகளை மேலும் வெளிக்கொணர அன்பர்கள், தமிழ் உறவுகள், தனியார் அரச நிறுவனங்கள், போன்றவர்களின் உதவியை இவர் வேண்டி நிற்கிறார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக