மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பிரதேச மக்களின் யானை தாக்குதல் பிரச்சினைகளுக்கான தீர்வு எட்டப்பட்டுள்ளது.
நேற்று மாலை போரதீவுப்பற்று பிரதேசசபையின் மண்டபத்தில் நடைபெற்ற விசேட உயர் கூட்டத்திலேயே இந்த பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட்டது.
போரதீவுப்பற்று பிரதேசத்தில் தொடரும் யானைகளின் தாக்குதலை கட்டுப்படுத்துமாறு கோரி குறித்த பிரதேச மக்கள் நேற்று காலை தொடக்கம் பிரதேசசெயலகம் மற்றும் மண்டூர்-மட்டக்களப்பு பிரதான வீதியை மறித்து போராட்டங்களில் ஈடுபட்டுவந்தனர்.
இந்த போராட்டமானது நேற்று மாலை வரை தொடர்ந்த நிலையில் இது தொடர்பில் ஆராயும் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான மா.நடராஜா,இரா.துரைரெட்னம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது வனஜீவராசிகள் திணைக்களத்துடன் படையினரும் இணைந்து கிராமங்களுக்குள் நுழைந்துள்ள யானைகளை துரத்துவதற்கான நடவடிக்கையினை எடுப்பதுடன் யானை தாக்குதலுக்குள்ளாகும் கிராமங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
அத்துடன் கிராமங்களுக்குள் தாக்குதல்களை நடாத்தும் யானைகளை மயக்க ஊசியை செலுத்தி கபரணையில் உள்ள யானை சரணாலயத்திற்கு கொண்டுசெல்வதற்காக அனுராதபுரத்தில் உள்ள வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்களை வரவழைப்பது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டதுடன் யானையின் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் யானைகள் மறைந்திருக்கும் பற்றைக்காடுகளை துப்புரவுசெய்யும் நடவடிக்கையினையும் முன்னெடுக்க இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
இந்த தீர்மானங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்ததையடுத்து பொதுமக்களின் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
கடந்த ஒரு மாதகாலத்தில் போரதீவுப்பற்று பிரதேசத்தில் யானையின் தாக்குதல்கள் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை போரதீவுப்பற்றில் இடம்பெறும் யானை தாக்குதல்களை கட்டுப்படுத்தி பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையினை எடுக்குமாறு வன{வராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாக முன்னாள் பிரதியமைச்சர் சோ.கணேசமூர்த்தி தெரிவித்தார்.
யானை தாக்குதல்கள் தொடர்பில் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் என்.வில்வரெட்னம் தமது கவனத்துக்கு கொண்டுவந்ததை தொடர்ந்து இது தொடர்பான நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
முதல் கட்டமாக பொதுமக்களின் பகுதிகளில் உள்ள யானை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கையெடுக்குமாறு உடனடி உத்தரவினையும் அமைச்சர் வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக