திருகோணமலை மாவட்டத்தின் உவர்மலை பகுதியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பிள்ளையின் தந்தையான புவனேந்திரன் தேவராசா (43 வயது) நொச்சிக்குளம் -சாந்திபுரம் காட்டுப் பகுதியில் நேற்று மாலை எலும்புக்கூடாக மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
குறித்த நபர் கடந்த 08 ம் மாதம் 27 ம் திகதி காணாமல் போனதாகவும், அதனையடுத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன் என்றழைக்கப்படும் நபர் மனைவியின் கைத்தொலைபேசிக்கு அழைப்பு விடுத்து கணவரை காட்டுப் பகுதியில் தடுத்து வைத்துள்ளதாகவும் அவரை மீட்பதற்கு பணம் மற்றும் நகைகள் தேவைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
பின்னர் தாயும் மகனும் வருகை தந்த வேளை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் செல்லும் போது பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருடன் கண்டதாகவும், அதனையடுத்து சந்தேக நபர் தாயையும் மகனையும் விட்டு விட்டு தப்பிச் சென்றதாகவும் பின்னர் கணவர் தலைமறைவிற்கு இவர் காரணம் எனவும் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
விசாரணைகளை மேற்கொண்ட தலைமையக பொலிஸார் சந்தேக நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது தான் இவரை கொலை செய்ததாகவும் கொலை செய்த இடத்தையும் காண்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இச்சந்தேக நபரான தர்ஷன் கடந்த 2011-10-11ம் திகதி நொச்சிக்குளம் பகுதியில் தனது பெரியம்மாவான தங்கம்மா என்றழைக்கப்படும் பெண்ணையும் அழைத்துச் சென்று கொலை செய்துள்ளதாகவும் அதனையடுத்து 2013-09-30 ம்திகதி இரவு 7.30 மணியளவில் தனது மகனை வருமாறு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்து நொச்சிக்குளம் குளத்துப்பகுதிக்கு கூட்டிச்சென்று கொலை செய்ததாகவும் சிறையில் இரண்டு வருடங்கள் இருந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு திருகோணமலை நீதவான் டி.சரவணராஐா வருகை தந்து பார்வையிட்டதுடன் சட்ட வைத்திய நிபுணரின் அறிக்கைக்கு உற்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டார்.
மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக