புதன், 24 ஜூன், 2015

மட்டக்களப்பில் பழுதடைந்த பால் பக்கட்டுகள் மீட்பு

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட முன்பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட பழுதடைந்த பால் பக்கட்டுகள் பொதுச்சுகாதார பரிசோதகரினால் மீட்கப்பட்டுள்ளது.


இன்று காலை கோட்டைமுனை பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முன்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த பால் பக்கட்டுகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

கல்விச்சேவைகள் இராஜாங்க அமைச்சினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக பசும்பால் வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ் இந்த பால் பக்கட்டுகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

இதன்போது பழுதடைந்த நிலையில் 11 பெட்டிகளில் உள்ளடக்கப்பட்ட 615 பால் பக்கட்டுகள் இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கப்படவிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் வி.சி.சகாதேவன் தெரிவித்தார்.

முறையாக பக்கட் செய்யப்படாத காரணத்தினால் குறித்த பால் பக்கட்டுகள் பழுதடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த பால் பக்கட்டுகளை மாணவர்கள் அருந்தியிருந்தால் வாந்திபேதி போன்ற நோய்களுக்குள்ளாகியிருக்கலாம் எனவும் பொதுச்சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இது தொடர்பில் குறித்த பால் பக்கட் நிறுவனத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான பணிகள் நடைபெற்றுவருவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.







Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate