செவ்வாய், 16 ஜூன், 2015

ஏறாவூரில் சிலரால் திட்டமிட்டு எனக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டுள்ளது –கிழக்கு மாகாண பிரதி தவிசாளர்

மக்கள் பிரதிநிதிகள் என்றவகையில் மக்கள் அழைப்பினை ஏற்றுச்சென்ற என்னை பிரச்சினைக்குள்ளான ஆளாக சித்திரிக்க முனைவது கண்டனத்துக்குரிய விடயம் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார்,கற்ற சமூகம் கண்மூடித்தனமாக விடயங்களை கையாளாமல் பொறுப்புடன் செயற்படவேண்டும் எனவும் தெரிவித்தார்.


மட்டக்களப்பு ,ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்திற்கு முன்பாக நேற்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமாருக்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டம்  தொடர்பில் கேட்;டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் ஆர்ப்பாட்டத்தின்போது மக்களின் அழைப்பின் பேரிலேயே அவ்விடத்திற்கு சென்றேன்.அதனை ஒன்றுடன் ஒன்று தொடர்புபடுத்தி அரசியல்பலத்தினை பயன்படுத்தியதாக உண்மைக்கு புறம்பானவகையில் இலங்கை ஆசிரிய சங்கத்தினை சேர்ந்த மட்டக்களப்பு கிளை செயலாளர் தெரிவித்துவருகின்றார்.இது அவரின் குறுகிய நோக்கத்தினைக்கொண்டதாகவே நோக்குகின்றேன்.

ஒரு அதிகாரியிடம் ஒரு பிரச்சினையை கொண்டுசெல்லும்போது அதனை ஆராயவேண்டியது அவரது கடமையாகும்.அதனைப்போன்றே ஒரு அரசியல்வாதியிடமும் மக்கள் கோரிக்கையிடும்போது அது தொடர்பில் ஆராயவேண்டியது அந்த அரசியல்வாதியின் கடமையாகும்.மக்கள் எங்களை வாக்களித்து மாகாணசபைக்கு அனுப்பியது வீட்டுக்குள் இருந்து அரசியல் செய்வதற்கு அல்ல.அவர்களுக்கு பிரச்சினைகள் ஏற்படும்போது அவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவுமே.

அந்தவகையிலேயே ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பெற்றோர் ஆர்ப்பாட்டம் செய்தபோது அப்பகுதிக்கு மக்கள் விடுத்த அழைப்பின் பேரிலேயே அங்கு சென்று மக்களுடன் கலந்துரையாடினேன்.

ஆனால் அதனை திரவுபடுத்தி அப்பிரதேசத்தினை சிலர் திட்டமிட்ட வகையில் என்மீதான இவ்வாறான அவதூறுகளை மேற்கொண்டுவருகின்றனர்.இது அவர்களின் கால்புணர்ச்சியையே காட்டுகின்றது.

அதுமட்டுமன்றி ஏறாவூர் விபுலானந்தா வித்தியாலயத்தின் பெற்றோரை வேறுவிதமாக கூறி அழைத்துவந்து எனக்கு எதிரான ஆர்ப்பாட்டமாக அது சிலரால் திட்டமிட்டு நடாத்தப்பட்டுள்ளது.

கல்வி சங்கங்களில் உள்ளவர்கள் அரசியல்வாதிகள்போல் செயற்பட்டு இந்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடுசெய்து எனக்கு எதிராக நடாத்தியுள்ளனர்.

இதன்போது புதிய அதிபரை பாடசாலைக்கு செல்லவிடாது நான் தடுத்ததாக தெரிவித்த குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை.அதற்கும் எனக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.இது என்மீதும் எனது கட்சி மீதும் சேரூபூசும் விடயமாகவே கருதுகின்றேன்.

இவ்வாறான நடவடிக்கைகள் தொடர்பிலும் இவ்வாறு மக்களை தூண்டுபவர்கள் தொடர்பிலும் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

மக்களுக்காக பணியாற்றிவரும் அரசியல்வாதி என்ற அடிப்படையில் எனது பணிக்கு இடையூறுகளை ஏற்படுத்திவரும் எனது நற்பெயருக்கு களங்கத்தினை ஏற்படுத்த சிலர் முற்றிகளை மேற்கொண்டுவருகின்றனர்.அவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்துவருகின்றேன்.

நாங்கள் அரசியல்வாதிகள் நாங்கள் என்றும் மக்கள் பிரச்சினைகளை பின்நின்று பார்க்கமாட்டோம்.நாங்கள் எந்தவேறுபாடுகளும் பார்க்காமல் தமிழ் மக்களின் கல்வி வளர்ச்சிக்கு தேவையானவற்றை தொடர்ந்து மேற்கொள்வோம்.

எதிர்வரும் காலங்களில் கல்வி வளர்ச்சிக்கு தடையாகவுள்ளோர் தொடர்பில் உரிய நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான நடவடிக்கையினை கிழக்கு மாகாணசபை ஊடாக மேற்கொள்ளதேவையான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளேன் என்றார்.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624919

Translate