தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட கிழக்கு மாகாணத்தைசேர்ந்த தமிழ் தேர்வு நாடிகளுக்கு ஜூலை 1ஆம் திகதிக்கு முன்னர் நியமனங்களை வழங்குவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை உறுதிமொழியளிக்கப்பட்டது.
தகுதியிருந்தும் புறக்கணிக்கப்பட்ட தமிழ் தேர்வுநாடிகள், எழுத்தாணைகள் கோரி மேன் முறையீட்டு நீதிமன்றில் இரண்டு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் இரண்டும், மேன் முறையீட்டு நீதிமன்ற தலைவர் விஜித் மலல்கொட முன்னிலையில் நேற்று திங்கட்கிழமை(15) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் பணிப்பின் பேரில் சட்டத்தரணிகளான ம. ஆ. சுமந்திரன் மற்றும் ஜூவனிற்றா அருளானந்தம் ஆகியோர் ஆஜராகினர்.
மேற்குறித்த வழக்கில், மனுதாரர் சார்பிலும் ஆளுநர் சார்பில், அர்ஜூன ஒபேசேகர ஆஜராகியிருந்தார்.
2014ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அப்பொழுது இருந்த அரசாங்கத்தின் கிழக்கு மாகாண ஆளுநர் மேஜர் மொஹான் விஜேவிக்கரமவினால் முகாமைத்துவ உத்தியோகத்தரும்; அபிவிருத்தி உத்தியோகத்தரும் பணிக்கு அமர்த்தபட்டனர்.
கொள்கை ரீதியாக தேர்வுகளிலே உயர்மதிப்பெண்களை பெற்ற பொழுதும் தமிழர் இப்பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை மாறாக சிங்கள மற்றும் முஸ்லிம் தேர்வுனாடிகளே பணியமர்த்தப்பட்டிருந்தனர்.
இது குறித்து தமிழ் தேர்வுனாடிகள் விசாரித்த பொழுது அடுத்து வரும் 3 வருடங்களுக்கு தமிழர் குறித்த நியமனங்களை பெறப்போவதில்லை என்ற பதிலையே பெற்றனர்.
இந்த நியமனங்களுக்கு எதிராக தமிழ் தேர்வுநாடிகள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திலே எழுத்தாணைகள் கோரி இரு வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.
நிலைமை இவ்வாறிருக்க கடந்த 2015 ஜனவரியில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் விளைவாக கிழக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநராக ஒஸ்டின் பெர்னாண்டோ நியமிக்கபட்டார்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற புறக்கணிப்புகள் தவறு என்பதை ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ ஏற்றுகொண்டதோடு இதற்கான தகுந்த நடவடிக்கையினை தகுதியுள்ள தமிழ் தேர்வுனாடிகளை பணியமர்த்துவதன் மூலம் எடுக்கவும் நீதிமன்றுக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.
இதனடிப்படையில் முறையே 2014ஆம் ஆண்டு பெப்ரவரி 10ஆம் திகதியிலிருந்தும் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் திகதியிலிருந்தும் இந்நியமனம் கொடுப்பதாகவும் அதற்கான கடிதங்கள் ஜூலை 1ஆம் திகதிக்கு முன்னதாக வழங்கப்படுவதாக நீதிமன்றுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக