அம்பாறை மாவட்டத்தில் தொடர்ச்சியாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் பட்டதாரிகள் தமது போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் அவர்கள் துண்டுப்பிரசுரம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அவர்களால் வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த மூன்று வருட காலமாக கிழக்கு மாகாண சபையால் வழங்கப்படுகின்ற வேலைவாய்ப்புக்களில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு வருகின்றமை முக்கிய பிரச்சினையாக உள்ளது.
இதற்கு சான்றாக கிழக்கு மாகாண சபையால் 2013 இல் விண்ணப்பம் கோரப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சையில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் சிறந்த முறையில் பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்த போதிலும் சகோதர இனத்தவர்களான சிங்கள, முஸ்லிம் பட்டதாரிகளுக்கு மட்டுமே நேர்முக பரீட்சை நடாத்தப்பட்டு வேலைவாய்ப்பு நியமனங்கள் வழங்கப்பட்டது.
மேலும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரியபோது அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டார்கள்.
அத்தோடு 2012 தொடக்கம் 2015 வரையானகாலப்பகுதியில் கிழக்கு மாகாணசபையால் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் எவ்வித வேலைவாய்ப்புக்களிலும் உள்வாங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
இப் பிரச்சினை ஏற்படுவதற்கான காரணமாக கிழக்கு மாகாண சபையின் இன, மாவட்ட ரீதியான விகிதாசார சமப்படுத்தல் என்ற அடிப்படையில் அரச வேலைவாய்ப்புக்கள் கொடுக்கப்படுவதே ஆகும்.
2013இல் நடாத்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் பரீட்சையில் தகுதி இருந்தும் தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டனர்.
இதற்கு எதிராக கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பின் போது கிழக்கு மாகாணசபை கடைப்பிடிக்கின்ற இன, மாவட்ட ரீதியான விகிதாசார சமப்படுத்தல் நீக்கப்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இருப்பினும் அது தொடர்பாக கிழக்கு மாகாண சபை இவை அனைத்தையும் ஏற்க மறுத்ததுடன் இதனை நிறைவேற்றப் போவதும் இல்லை என கூறியது..........கூறுகின்றது.
தற்போது கிழக்கு மாகாணத்தில் ஏறத்தாள 1900ற்கு மேற்பட்ட ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கான நியமனங்கள் வழங்கப்படுகின்றபோது அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகள் புறக்கணிக்கப்படுவதுடன், மறைமுகமாக சகோதர இனத்தவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்படலாம் என ஐயுறுகின்றோம்.
இதைச் சான்று பகிரும் வகையில் 2015.10.05 அன்று கிழக்கு மாகாணசபைக்கு உட்பட்ட சகோதர இனத்தவர்களான சிங்களவர்களிற்கு சிங்களமொழி மூல பட்டதாரிகளிற்கான நேர்முகப்பரீட்சை நடைபெறுகின்றது.
இதற்காக 2015.05.11ற்கு முற்பட்ட காலப்பகுதியில் பட்டச்சான்றிதழைப் பெறதகுதியான சிங்களமொழி மூல பட்டதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிற்கு நியமனம் வழங்குவது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளாகிய எங்களிற்கு இதுதொடர்பில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
இதேபோன்ற நியமனங்களை அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளாகிய எங்களிற்கும் வழங்குங்கள்.
மூன்று வருட காலமாக பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்களும், கிழக்கு மாகாணசபையால் புறக்கணிக்கப்பட்டவர்களுமாகிய அம்பாறை மாவட்ட தமிழ் பட்டதாரிகளின் நியாயமான கோரிக்கைகளிற்கு தீர்க்கமாக பதிலளிக்கதவறிய முதலமைச்சர் எங்களிற்கு வழங்க இருக்கும் முடிவு என்ன?
ஆகவே எங்களது கோரிக்கைகள் ஊடாக நியாயமான நீதியை பெறவேண்டி 2015.09.30 தொடக்கம் 2015.10.07 வரையில் 7ஆவதுநாளாக இன்றும் உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்தும் மேற்கொண்டுவருகின்றோம்.
எமக்கு இதுவரை சம்மந்தப்பட்டவர்களிடம் இருந்து எந்த ஒரு தீர்மானமும் கிடைக்கப்பெறவில்லை. இப் பிரச்சினையானது எம்மையும், எமது எதிர்கால தமிழ் சந்ததியினரையும் பாதிக்கும் ஒரு விடயமாகவே காணப்படுகின்றது.
எனவே இப் பிரச்சினையானது எங்கள் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களையும், எதிர்கால தமிழ் சந்ததியினரையும் பாதிக்காது இருப்பதற்கு எங்களுடன் தாங்களும் கைகோர்த்து, எங்களுக்கு மட்டுமல்லாமல் எதிர்கால சந்ததியினரையும் கருத்திற்கொண்டு உங்களது ஆதரவை வழங்குமாறு மிகவும் தயவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறித்த துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக