செவ்வாய், 6 அக்டோபர், 2015

இன்றைய ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணி புரிகின்றனரா?

இலங்கையில் இன்று சர்வதேச ஆசிரியர் தின கொண்டாட்டம்
சர்வதேச ரீதியாக பல்வேறு தினங்கள் கொண்டாடப்படுகின்றவேளை ஆசிரியர்களையும் மதித்து அவர்களுக்கான ஓர் தினத்தை ஐக்கிய நாடுகள் அமைப்பகம் பிரகடனப் படுத்தியுள்ளது.
ஆசிரியர்களின் கெளரவம், மேன்மை, உயர்வு, மாண்பு போன்ற வைகளை எடுத்தியம்புவதற்காக வருடந்தோறும் ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.
யுனெஸ்கோவினால் பிரகடனப்படுத் தப்பட்ட ஆசிரியர் தினம் 1994 ஆம் ஆண்டு ஒக்டோபர் 6 ஆம் திகதி முதல் தடவையாக இலங்கையில் கொண் டாடப்பட்டது. சமூகத்தின் ஏணிகளாகவும் தோணிக ளாகவும் இருந்து வழியேற்பட பாலங்களாய் அமைந்துள்ள ஆசிரியர்களது பல்வேறு பிரச்சினைகளும் ஆராயப்பட வேண்டிய நாள் இன்றாகும்.
‘எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு’ என்ற பொன்மொழிக்கு எடுத் துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான்.
கிரேக்க வரலாற்றில் இடம்பெற்ற ஆசிரியர் சோக்ரடீஸ், அவர் மாணவர் பிளேட்டோ, அவர் மாணவர் அரிஸ்டோட்டில், இவர்களை உலகம் இன்னும் இரு கரம் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறது.
உலகில் நிகழும், நிகழ்த்தப்படும் மாற்றங்கள், வியப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமூகத்தினால் தான் என்பதை வைத்தே அதனை ஒரு தினத்துக்கு மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என்பது எமது வாதம். உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு ஜீவனுக்கும் பின்னால் ஓர் ஆசான் இருக்கிறான் என்பதே யதார்த்தமாகும்.
ஒரு சமூகம் அதிஉன்னத நிலை அடைந்து இருந்தால் நிட்சயமாக அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம். ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம். வேறு எந்த துறையை விடவும் அதிக பொறுப் புகளும் அதிக முக்கியத்து வமும் நிறைந்தது அவர்கள் பயணம்.

ஒரு மாணவன் ஆசிரியரை சேரும் தருணத்தில் வெறும் மண் கலவையாய் மட்டுமே உள்ளான். அவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியனின் பணியாக உள்ளது. தெளிவான, சிறப்பான மாணவ சமூகத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு முதன்மையானது என்பதை இங்கு யாரும் மறுக்க முடியாது. அதிலும் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களின் உழைப்பினை தான் நாம் அதிகம் பாரா ட்ட வேண்டும்.
தன்னிடம் ஒப்படைக்கப்படும் மாண வனை நல்ல மாணவனாக ஆக்குவதோடு. நல்ல மனிதனாக மாற்றும் பொறுப்பும் ஆசிரியர்களுக்கும் இருக்கிறது. அதே போல் ஆசிரியர்கள் என்பவர்கள் மாணவ சமூகத்தை உருவாக்குபவர்கள் அல்ல. மாறாக உயிரூட்டுபவர்கள்.
 சிறந்த ஆசிரியர்களின் பண்புகள், குணங்களை பார்க்கும் மாணவ மாணவிகளின் மனதில் அப்படியே பதியும். அதனால் ஆசிரியர்கள் தங்களை மாணவர்களின் காலக்கண்ணாடி என்ற எண்ணத்தில் தான் பணியாற்றி வருகின்றனர். அப்படி பணியாற்றுவதன் மூலம் கடினமாக உழைத்து வாழ்வில் ஒளிரும் மாணவ சமூகத்திற்கு ஆசிரியர்கள் உரிமையாளர்களாக மாறுகின்றனர்.
ஆனால் ஆசிரியர்கள் இதற்கெல்லாம் தகுதியுடையவர்களாக நடந்து கொள்கி றார்களா? அன்றைய கால ஆசிரியர்களைப் போல் அர்ப்பணிப்பு உணர்வுடன் இன்றைய ஆசிரியர்கள் பணிபுரிகிறார்களா? சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தியாகம், தொண்டு இவர்களிடம் இருக்க வேண்டும் என்று நாடு எதிர்பார்ப்பதில் தவறில்லையே! ஆசிரியப் பணி என்பது ஊதியத்துக்காக மட்டுமே செய்யப்படும் தொழில் அல்ல, தொண்டு என்பதை மறந்து விடக்கூடாது.
இந்த நாட்டின் இளைய தலைமுறை இவர்களிடம் ஒப்படைக்கப் பட்டிருக்கிறது. அவர்களின் உடல் வளர்ச்சியோடு உள வளர்ச்சியும் சேர வேண்டும். கல்வியும் அறிவும் அவர்களை பக்குவப்படுத்த வேண்டும்.
ஒரு சிறந்த ஆசிரியன் தனது மாணவனின் உயர்ச்சியில் மகிழ்ச்சி காண்பான்.
அவனது புன்முறுவலில் தனது இதழ் அசைப்பான். அவனது கவலைகளில் தனது உள்ளம் உருகுவான். அவனது முயற்சிக்கு இவன் கைகொடுப்பான். தனது மாணவர்களுக்காக விடியலாக நினைத்து கண்விழிப்பான்.
ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்படும் பிள்ளைகள் வெள்ளைக் காகிதங்கள். அதில் எதனை நாம் விதைக் கின்றோமோ அதனையே அவர்களிடமிருந்து அறுவடை செய்யப் போகின்றோம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். \
அதில் நாம் எமக்கு பயன்தராத விதைகளை தூவி விடுவோமானால் களைகளையே நாம் அறுவடை செய்ய வேண்டியிருக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சிறந்த ஆசிரி யன் எவ்வாறான தன்மைகளை தன்னில் கொண்டிருக்க வேண்டும் என்ற விடயத்தினை Teacher என்ற ஆங்கிலப் பதமானது எமக்கு உணர்த்தி நிற்பதனை நாம் காணலாம்.
T - Training  - பயிற்சி
E - Education  - கல்வி
A - Ability - திறமை
C - Creativity - படைப்புத் திறன்
H - Humansim - மனிதம்
E - Efficiency  - வினைத்திறன்
R - Reformer  - சீர்திருத்தவாதி
ஆகவே சீர்திருத்தவாதிகளான நாம் எமது பிள்ளைகளாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மாணவர்களை கருதுவோம். அவர்களுக்கு தமது பெறுமதியினை உணரச் செய்வோம். நாளை உலகின் தலையெழுத்துக்களை தீர்மானிப்பவர்கள் நீங்கள்தான் என்பதை உணரச் செய்வோம். அதற்காக அவர்களை தயார் செய்வோம்.
இதுவரை தொடர்ந்து இதற்கான எமது தியாகங்கள் மேலும் தொடரும் என்ற உறுதியினை இன்றைய ஆசிரியர் தின நற்செய்தியாக உலகிற்களிப் போம். அதற்காக நாளும் நாம் பாடுபடு வோம்.
றிப்கா அன்ஸார் பிரதி அதிபர் அல்-ஹிலால் வித்தியாலயம்
சாய்ந்தமருது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate