(பழுலுல்லாஹ் பர்ஹான்)
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு 08.10.2015 காத்தான்குடி ஸாஹிறா விஷேட தேவையுடையோர் பாடசாலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர். எம்.எஸ்.எம்.ஜாபிர் கலந்து கொண்டார்.
இங்கு உரையாற்றிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் கருத்துத் தெரிவிக்கும் போது -விஷேட தேவை என்பது பிறப்பின் மூலம் அல்லது ஒரு சம்பவத்தின் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் நிகழ்வாகும். இதனை ஒரு போதுமே குறையாக நாம் கருதக் கூடாது.
எமது வாழ்க்கையில் ஒரு சவாலாக ஏற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பிள்ளைக்கும் உடல், ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ துஸ்பிரயோகம் ஏற்படுவதை ஒரு போதுமே அனுமதிக்க முடியாது.
பிள்ளைகளின் தேவை அறிந்து செயற்படுவதில்தான் மனித நேயம் தங்கியிருக்கிறது. வாழ்க்கை வழுக்கி விழும் சதுப்பு நிலம் போன்றது அதில் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியினையும் மிகவும் கவனமாக வைக்க வேண்டும். பொறுமை, விட்டுக் கொடுத்தல் மற்றும் சகிப்புத் தன்மை ஒரு மனிதனிடம் இருக்கின்ற போது அவன் சமுகச் சூழலுக்கு ஏற்றவாறு வாழப் பழகிக் கொள்கிறான் என கருத்துத் தெரிவித்ததுடன் பிரதம அதிதி டாக்டர். ஜாபிர் உரையாற்றுகையில்,
ஒரு மனிதனுக்கு அன்பு மிகப் பெரிய ஆயுதம். அது மனித உரிமையுடன் மிகவும் தொடர்புடையதாக இருக்கிறது.
விஷேட தேவையுடையவர்களின் உயர்ச்சிக்கு ஒரு தாய், மற்றும் பாதுகாவலர் எவரோ ஒருவர் பங்களிப்புச் செய்து முன்னேறிய வரலாறுகள் பல உள்ளது. உலகத்தில் இன்றுமே பெயர் சொல்லக்கூடிய விஞ்ஞானிகள்,அறிஞர்கள் சமுகத்தால் ஒதுக்கப்பட்டவர்களாகவே அன்று இருந்தார்கள். இன்று அவர்களது கண்டு பிடிப்புக்கள் பற்றி பேசுவதுடன் அது சமுகத்திற்கு பிரயோசனமாகவே இருக்கிறது.
எனவே பிள்ளைகளுக்கு தண்டனை கொடுப்பதன் மூலம் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஒன்றுமே சாதிக்கப் போவதில்லை. புலமைப் பரிசில் பரீட்சைக்காக பிள்ளைகள் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். இது பிள்ளையின் எதிர்காலத்தை மிகவும் பாதிக்கும் என கருத்துத் தெரிவித்தார்.
இதில் விஷேட தேவையுடைய மாணவர்களது கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன், பரிசில்களும் வழங்கப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக