புதன், 10 ஜூன், 2015

மட்டு.கொக்கட்டிச்சோலையில் யானை தாக்குதலினால் ஒருவர் உயிரிழப்பு –ஒருவாரத்தில் மூன்று பேர் பலி

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புளுவினமடு, பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானை தாக்குதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இன்று அதிகாலை 5.30மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை(60வயது)என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் குழுவினமடு பகுதியில் கால்நடை வளர்ப்பு மற்றும் சேனைப்பயிர்செய்கையில் ஈடுபட்டுவந்த நிலையிலேயே யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்ததாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு சென்ற கொக்கட்டிச்சோலை பொலிஸார் மற்றும் திடீர் மரணவிசாரணை அதிகாரி ரி.காராளசிங்கம் ஆகியோர் மரண விசாரணை நடாத்தினர்.

அத்துடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னமும் சம்பவ இடத்துக்கு சென்று இது தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளையும் வழங்கினார்.

களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி அப்துல் ரியாழின் பணிப்புரையின் கீழ் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

கடந்த ஒரு வார காலத்தில் யானையின் தாக்குதல்கள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பிரதேசத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் வாழ்வாதார பயிர்ச்செய்கைகளும் அழிக்கப்பட்டுள்ளன.

இந்த யானை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் கடந்த அரசாங்க காலத்திலும் இன்றைய அரசாங்க காலத்திலும் பல்வேறு கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டபோதிலும் இதுவரையில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையே இருந்துவருகின்றது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியாக இவ்வாறான அழிவுகளை மக்கள் எதிர்கொண்டுவருகின்றனர்.








Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate