புதன், 10 ஜூன், 2015

பெரியகல்லாறு கடலாச்சியம்மன் ஆலய ஒருநாள் திருச்சடங்கு –சிறப்பாக நடைபெற்ற பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு

(புருசோத்)

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்கதும் இலங்கையில் முதல் கடலாச்சியம்மன் ஆலயமாகவும் உள்ள மட்டக்களப்பு பெரியகல்லாறு அருள்மிகு ஸ்ரீகடலாச்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு நேற்று திங்கட்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.


இலங்கையில் முதல் கடலாச்சியம்மன் ஆலயமாக கருதப்படும் இந்த ஆலயத்தின் திருச்சடங்கு ஒரு நாள் திருச்சடங்காக நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் ஆரம்பத்தில் நேற்று மாலை பெரியகல்லாறு ஸ்ரீசர்வார்த்த சித்திவிநாயகர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளச்செய்யும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது.

பக்தர்கள் புடை சூழ,பறவைக்காவடிகள்,காவடிகள் அடியார்கள் எடுத்துவர ஆயிரக்கணக்கான பெண்கள் தீச்சட்டி ஏந்திவரும்போது அம்பாளினை எழுந்தருளச்செய்யப்பட்டு ஆலயத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ஆலயத்தின் திருக்கதவு திறக்கப்பட்டு திருச்சடங்கு ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் நள்ளிரவு பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இந்த திருச்சடங்கின் மிக முக்கிய நிகழ்வாக இந்த பூரணை கும்பம் நிறுத்தும் நிகழ்வு நடைபெற்றுவருகின்றது.இந்த பூரணை கும்பம் நிறுத்தும்போது அதில் அம்பாள் எழுந்தருளுவதாக நம்பப்படுகின்றது.

இந்த பூரணைகும்பம் நிறுத்தும்போது சிறுமிகள் ஆரத்தி எடுத்து அம்பாளை வரவேற்கும் காட்சி இங்கு சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

பூரணை கும்பத்தினை தொடர்ந்து பொங்கல் நிகழ்வு நடைபெற்று அதிகாலை செவ்வாய்க்கு பாடும் நிகழ்வு இடம்பெற்று வருடாந்த உற்சவம் சிறப்பாக நிறைவுபெற்றது.

இந்த உற்சவத்தில் உலகெங்கும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வருகைதருகின்றமை இந்த ஆலயத்தின் சிறப்பம்சமாகும்.













































Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate