வெள்ளி, 12 ஜூன், 2015

காத்தான்குடியில் பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி நகரசபைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நாளாந்தம் சேருகின்ற குப்பைகளை அகற்றுமாறு கோரி, காத்தான்குடி நகரசபை மற்றும் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள மட்டக்களப்பு – கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் குப்பைகளை கொட்டி ஆர்ப்பாட்டமொன்று இன்று (11.06.2015) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இவ் ஆர்பாட்டத்தில் காத்தான்குடி நகர சபையின் முன்னால் தவிசாளர் அஸ்பர், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பரீட் உட்பட பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் முதலமைச்சரே எமது குப்பை பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வாருங்கள், நகர சபையே உடனடியாக குப்பைகளை அகற்றி நிரந்த தீர்வினை தா?, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரே எமது ஊரில் குப்பைகளை அகற்றி நிரந்தரமாக வாழ விடு, விஷேட ஆணையாளரே குப்பைக்கு உமது தீர்வு என்ன?, நகர சபையே இதுதான் உனது பசுமை நகரமா?, முன்னாள் உதவி மாவட்ட அரசாங்க அதிபர் சரீப் சேரே நீதி மன்றத்தில் குப்பை தொடர்பான வழக்கினை வாபஸ் பெறு, அரசாங்க அதிபரே! எமது ஊர் குப்பைகளை கொட்டுவதற்கான காணியை உடன் ஒதுக்கித் தாருங்கள் போன்ற பல்வேறு தமிழ் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
மேற்படி ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு, காத்தான்குடி நகர சபையின் செயலாளரும், விஷேட ஆணையாளருமான ஜெ.சர்வேஸ்வரன், காத்தான்குடி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்கர் தசநாயக்க உட்பட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் வருகைதந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன் பின்னர் காத்தான்குடி பிராந்தியத்திற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தசாநாயக்க குறித்த குப்பை பிரச்சினைக்கு உடனடியாக நாளை வெள்ளிக்கிழமை பின்னேரம் தீர்வு பெற்றுத் தருவதாக கூறியதையேடுத்து ஆர்ப்பாட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிசார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate