திங்கள், 21 செப்டம்பர், 2015

மட்டக்களப்பில் 25வருடமாக வெளியுலகுக்கு வராத படுகொலை சம்பவத்தின் நினைவு தினம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடிக் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் 31 பேரின் நினைவாக பிரார்த்தனை நிகழ்வு ஞாயிறன்ற காலை இடம்பெற்றது.

கிராமத்தவர்கள் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் சவுக்கடி காட்டுப் பகுதியிலுள்ள  நினைவுத்தூபிப் பகுதியில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அரியமலர் செல்வராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மற்றும் கிறிஸ்தவ மதபோதகர்கள் ஆகியோரும்  கலந்து கொண்டனர்.

1990 ஆம் ஆண்டு செப்ரெம்பெர் மாதம் 20 ஆம் திகதி காலையில் இராணுவ சீருடை தரித்து ஆயுதங்களுடன் கிராமத்திற்குள் புகுந்தவர்கள் சிலமாதக் குழந்தைகள் தொடக்கம் வயோதிபர்கள் வரை தமது பிடியில் அகப்பட்ட சுமார் 31 பேரை படுகொலை செய்ததாக கிராமத்தவர்கள் தெரிவித்தனர்.

ஆயினும், தமது சவுக்கடி மீனவக் கிராமம் ஒதுக்குப் புறப் பகுதியாக இருப்பதால் இந்தப் படுகொலை விவகாரம் உலகத்தவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் ஆதங்கப்படுகின்றனர்.

தன்னாமுனைப் பங்கின் சவுக்கடி தூய யாகப்பர் ஆலய அடிகளார் அன்ரனி ராஜ் திருப்பலி பிரார்த்தனை நிகழ்வுகளின் இறுதியில் உரையாற்றும் போது, ஜனநாயகமற்ற யுத்த காலத்தில் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டுவர முடியாத சூழ்நிலை இருந்தது.

இப்பொழுதும் படுகொலை செய்யப்பட்ட பலரின் உடல்கள் மாத்திரமல்ல உண்மையும் கூட புதைக்கப்பட்டுத்தானுள்ளது.

வாழுகின்ற உறவினர்களின் வேதனைகளிலிருந்து இப்படுகொலைகள் நீங்காத துயரங்களாக இடம்பிடித்திருக்கின்றன.

நாங்கள் சிந்துகின்ற கண்ணீர்த் துளிகளும், பிரார்த்தனைகளும் இனியும் இந்தப் பூமியில் அநியாயமாக எவரும் இரத்தம் சிந்தி விடக் கூடாது என்பதற்காகவே இத்தகைய நினைவஞ்சலிகள் அமைந்திருக்கின்றன.

நீதி ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டும். அது கிடைக்காவிட்டால் பலவிதமான உடலியல் உபாதைகளுக்கும் மனிதர்களை ஆழ்த்துகின்றது என்ற அறிவியல் யதார்த்தத்தை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீதி வெளிக் கொண்டு வரப்படவேண்டும். உள்ளத்தால் காயமடைந்தவர்கள் குணப்படுத்தப்பட வேபண்டும்.

மனித உயிர்கள் ஒரு பொருளல்ல அது இறைவனின் அருட்கொடை அது இந்த நாட்டில் மதிக்கப்பட வேண்டும் என்பதை நான் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என்றார்.

இந்நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அரியமலர் செல்வராசா, தன்னாமுனைப் பங்கின் சவுக்கடி தூய யாகப்பர் ஆலய அடிகளார் அன்ரனி ராஜ்,தன்னாமுனைப் பங்கு போதகர் ஜீவானந்தம், மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சியாமளா ஆனந்த், சவுக்கடி மீனவர் சங்கத் தலைவர் கே. மரியசீலன் உட்பட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


















Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624922

Translate