(நித்தி)
நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவு செய்யப்பட்டதை கொண்டாடும் முகமாகவும் அவருக்கு ஆரோக்கியமான நல்லாசியும் வேண்டி மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று அதிகமான இந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
சித்தாண்டி இளைஞனர் அணியினராலும் பொது மக்களினாலும் இணைந்து சித்தாண்டி முச்சந்திப்பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் பானைவைத்து விநாயகப்பெருமானுக்கு விசேட அபிசேகப் பூசை மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.இன்றைய தினம் வந்தாறுமூலை மகா விஸ்ணு ஆலயத்திலும் விசேட பூசைகளை ஒழுங்கு செய்திருந்தனர். இதன்போது கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் துரைராஜாசிங்கம் கலந்துகொண்டு நடைபெற்ற பூசை வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களினால் வாகரை,வாழைச்சேனை, சித்தாண்டி, வந்தாறுமூலை, செங்கலடிஇ தன்னாமுனை, மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை, மண்டூர் போன்ற இடங்களில் பட்டாசு கொளுத்தியும் இனிப்புப் பண்டங்கள் பரிமாறியும் ஆலயங்களில் பொங்கல் பானை வைத்தும் அத்துடன் குளிர்பானங்கள் வழங்கியும் தங்களின் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களையும் நடாத்தியிருந்தனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் போன்றவர்களினாலும் இரா.சம்மந்தன் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நீண்டகால அரசியல் பயணத்திற்காக வேண்டியும் வழிபாடுகள் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக