வியாழன், 4 ஜூன், 2015

மட்டக்களப்பு மாவட்டம் மீள்குடியேற்ற நிதியொதுக்கீட்டில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் துரைரெட்னம் குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையும் மீள்குடியேற்ற அமைச்சரும் புறக்கணிப்பு போக்கிலேயே செயற்பட்டுவருவதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றஞ்சாட்டியுள்ளார்.


இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை கருத்து தெரிவித்த மாகாணசபை உறுப்பினர்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் மீள்குடியேற்றம் தொடர்பில் கிழக்கு மாகாணசபையில் கடந்த காலத்தில் பல தடவைகள் கோரிக்கை என்னால் விடுக்கப்பட்டது.அதேபோன்று பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டது.

அதேபோன்று மீள்குடியேற்ற அமைச்சராக முன்னைய அரசாங்கத்திலும் இன்று அமைச்சராக இருப்பவரிடமும் கோரிக்கைகளை நேரடியாகவும் தொலைபேசி மூலமும் தெரிவித்துள்ளதுடன் 28 தடவைக்கு மேலாக கடிதம் மூலமும் அறிவித்துள்ளேன்.
ஆனால் இது தொடர்பில் இதுவரையில் எதுவித நடவடிக்கையோ மீள்குடியேற்ற செயற்பாடுகளோ மேற்கொள்ளப்படாத நிலையே இருந்துவருகின்றது.

எனினும் சில தினங்களுக்கு முன்னர் வடக்கு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மீள்குடியேற்றத்திற்கு என நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு எதுவித நிதியும் இதுவரையில் ஒதுக்கப்படவில்லை.

மட்டக்களப்பு மாவட்டத்தினைப்பொறுத்தவரையில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட எல்வத்தைமடு,புனாணையில் குறிப்பிட்ட ஒரு பகுதி,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருகாலியடிச்சேனை, முறக்கொட்டாஞ்சேனை, முள்ளிவட்டுவான், செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஏறாவூர் நான்காம் வட்டாரம்,ஆவட்டியாவெளி,மண்முனை வடக்கில் வலையிறவும்,வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பாலமுனை,சின்னவத்தை ஆகிய பகுதிகளிலும் இதுவரையில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறவில்லை.

அதேபோன்று பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு, கச்சக்கொடிசுவாமிமலை,வவுணதீவு பிரதேச செயலகத்துக்குட்பட்ட சிப்பிமடு, பாவற்கொடிச்சேனை, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புனாணை,கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வடமுனை,ஊத்துச்சேனை,மயிலந்தனை ஆகிய பகுதிகளில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படாத நிலையில் பலர் உள்ள நிலையில் யானைகளின் தாக்குதல்கள் காரணமாக பலர் இடம்பெயர்ந்த நிலையிலும் உள்ளனர்.
அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்திசெய்யப்படவேண்டும் என்பதுடன் இடம்பெயர்ந்தவர்களும் மீள்குடியேற்றம் செய்யப்படவேண்டும்.

அத்துடன் இடம்பெயர்ந்த நிலையில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதநகர் பகுதியில் வாழும் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஸ்ரீஅந்த இடத்திலேயே நிரந்தரமாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறான நிலையில் நிதியொதுக்கீடுகளில் மட்டக்களப்பு மாவட்டம் மத்திய அரசாங்கத்தினாலும் மாகாண சபையினாலும் புறக்கணிக்கப்பட்ட விடயமானது கவலைக்குரிய விடயமாகும்.

கடந்த காலத்திலும் மீள்குடியேற்றம் என்ற போர்வையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாத நிலையில் வெறும் கண்துடைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இது தொடர்பில் மீள்குடியேற்ற அமைச்சர் கவனத்தில் கொண்டு உடனடியாக மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வருகைதந்து மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேற்ற நிலைமைகள் தொடர்பில் ஆராயவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate