வெள்ளி, 31 ஜூலை, 2015

தீர்வுத்திட்டம் எதனையும் பெரும்பான்மைக்கட்சிகள் கொண்டிருக்கவில்லை –ஜனா

இனப்பிரச்சினை தொடர்பாக எத்தகைய தெளிவான தீர்வுத்திட்டங்கள் எதையுமே பெரும்பான்மைக்கட்சிகள் தமது தேர்தல் வஞ்ஞாபனத்தில் தெளிவாக முன்வைக்கவில்லை. இது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூறவில்லை என்பதை விட சிங்கள மக்கள் மத்தியில் கூறவிரும்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்குட்பட்ட பலாச்சோலையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் பிரச்சார நகர்வுகளை எம்மக்கள் உன்னிப்பாக கவனிக்கவேண்டும், அவதானிக்கவேண்டும் அப்போதுதான் ஆடு நனைவதற்காக அழும் ஓநாய்களை எம்மக்கள் புரிந்து கொள்ளமுடியும்.

பேரினவாதக்கட்சிகளில் போட்டியிடும் வெற்றிவாய்ப்பில் நம்பிக்கை கொண்ட வேட்பாளர்கள் எமது பகுதிகளில் நடைபெறும் பிரசாரக்கூட்டங்களில் இன, மத, சமூக, நல்லிணக்கம் பற்றி வலியுறுத்துவதுடன்  இவற்றை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் சிதைப்பது போன்ற விம்பங்களையும் எம்மக்கள் மத்தியில் முன்வைக்கின்றார்கள்.

இன்னும் ஒரு படி மேலாக பாரதம் இராமாயணம் போன்ற இதிகாசக்கதைகளையும் எமக்கு எடுத்துக் கூறுகிறார்கள். இடையிடையே பிள்ளையார்சுழி என்று அவரையும் வம்புக்கு இழுக்கின்றார்கள்.

கடந்த காலங்களில் அதிகாரத்தை தம்பக்கம் வைத்துக்கொண்டும் பதவிகளை தம்கைகளில் வைத்துக்கொண்டும் தமிழ் மக்கள்வாழ்வு, தமிழ்மக்கள்நிலம், தமிழ்மக்கள் பொருளாதாரம், தமிழ்மக்களது பிரதேசம் என சகல துறைகளிலும் பின்னடைவுக்கு பிள்ளையார் சுழி போட்ட இவர்கள் இன்று எம்மக்களுக்கு வேதம் ஓதுகின்றார்கள். இதை நான் காழ்ப்புணர்வில் கூறவில்லை. வடக்கே திருக்கொண்டியாமடு இருந்து தெற்கே நீலாவணை வரையும் பேரூந்தில் பிரயாணம் செய்யும் எவரும்  பிரதேச அபிவிருத்தியில் கூட நாமும் நமது பிரதேசமும் எவ்வாறு இவர்களால் ஏமாற்றப்பட்டோம் என்ற உண்மையை இலகுவாக உணரமுடியும்.

இன்று தெற்கின் தேவையோ 18 ஆவது 19 ஆகி இது 20 ஆக மாறவுள்ள நேரத்தில் வடகிழக்கிற்கோ 13 இற்கு மேல் நகர வாய்ப்பில்லை. இதுவே எம்மக்கள் புரிந்து கொள்ளவேண்டிய இன்றைய அரசியல் யதார்த்தம்.
தமிழ் மக்கள் பிரச்சினை தொடர்பாக பேரினவாதம் செல்லும் எல்லை 13 ஆவது திருத்தம் மட்டுமே அதற்கு அப்பால் ஒரு அங்குலம் கூட நகர்வு இல்லை. இதற்கு ரணிலோ, மைத்திரியோ, மஹிந்தவோ விதிவிலக்கல்ல, எம்மக்கள் பொறுத்தவரை இவர்கள் அனைவரும் ஓரே குட்டையில் ஊறியவர்களே.

ஆறு தசாப்தத்திற்கு மேலாக புரையோடிப்போன எமது இனப்பிரச்சினை தொடர்பாக எத்தகைய தெளிவான தீர்வுத்திட்டங்கள் எதையுமே பெரும்பான்மைக்கட்சிகள் தமது தேர்தல் வஞ்ஞாபனத்தில் தெளிவாக முன்வைக்கவில்லை. இது தொடர்பாக சிங்கள மக்கள் மத்தியில் எடுத்துக் கூறவில்லை. கூறவில்லை என்பதை விட சிங்கள மக்கள் மத்தியில் கூறவிரும்பவில்லை என்பதே பொருத்தமாகும்.

நிறைவேற்றதிகாரமுடன் 10 வருடம் பதவியில் இருந்த மஹிந்த 13 + என்று அண்டை நாடுகளையும் சர்வதேசத்தையும், ஐ.நா.வையும் கூட ஏமாற்றினார். நல்லாட்சி நாயகன் ரணில் ஒற்றையாட்சிக்குள்ளும் 13ஆவது திருத்தத்திற்குள்ளும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறுகின்றார். இவர்கள் தொடர்பாக எம்மக்கள் ஆத்திரம் கொள்வதா அல்லது அனுதாபம் கொள்வதா என்று புரியமுடியாதுள்ளார்கள்.

இன்றைய ஒற்றையாட்சியும் 13ஆவது திருத்தமும் இதுவரை தீர்க்காத எமது பிரச்சினையை எதிர்காலத்தில் எப்படி தீர்க்கும் என்பது ரணிலுக்கு மட்டுமே வெளிச்சம். இந்த லட்சணத்தில் இவர்களைத்தான் எம்மக்களையும் எம்மண்ணையும் இரட்சிக்க வந்த இரட்சகனாக அவரது அடிவருடிகள் எமக்கு எடுத்தோதுகிறார்கள், எடுத்துக்காட்டுகின்றார்கள்.

எம்தமிழ் உறவுகளே ஒன்றைமட்டும் திடமாக நம்புங்கள். எமது இனப்பிரச்சினை தொடர்பாக பேரினவாதக்கட்சிகளின் நிலைப்பாடு ஒன்றே. இவர்கள் எமது பிரச்சினை தொடர்பாக தீர்வுத்திட்டங்களை முன்வைப்பார்கள் என்றோ, அதனை சிங்கள மக்களிடம் எடுத்துக்கூறுவார்கள் என்றோ எதிர் பார்ப்பது எமது ஏமாற்றம், இது கடந்த காலம் கற்றுத்தந்த பட்டறிவு.
நமது பிரச்சினை தீர்வு தொடர்பாக நாமே சிந்திக்கவேண்டும்,

திட்டமிடவேண்டும், போராட்டவடிவை இனம்கான வேண்டும். நாமே போராடவேணடும் இப்போராட்டத்தில் வெற்றிபெற வேண்டும். இப்போராட்டத்திற்கான புதிய களம் ஒன்று ஆகஸ்ட் 17இல் திறக்கப்படுகிறது.

களத்தில் போராடுவதற்கான ஆயுதம் வாக்குச்சீட்டு என்னும் வடிவத்தில் உங்கள் கரத்தில் இருக்கின்றது. நாம் அனைவரும் ஒன்றிணைவோம், களம் புகுவோம், இனம்காணுவோம் எதிரியை, இலகுவாக வெற்றி பெறுவோம். இதுவே எமது இனப்பிரச்சினை தீர்வுக்காக நாம் எடுக்கவேண்டிய அடுத்தகட்ட உடனடி தந்திரோபாய நகர்வு. இதை எம்மக்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.

இன்று தேர்தல் மேடையில் இருதுருவமாக இருந்து இருபேரினவாதக்கட்சிகளோடு இணைந்து போட்டியிடும்  இருவரதும் பிரதான இலக்கு தமது கட்சிகளில் போட்டியிடும் தமிழர்கள் மூலம் கிடைக்கும் ஒருசில அற்ப சொற்ப வாக்குகளே ஆகும். இந்த அற்பசொற்ப வாக்குகள் கூட இவர்களது எதிர்கால அரசியல் வாழ்வுக்கு அவசிய பிராணவாயு ஆகும்.

இதற்காகத்தான் இந்த சாத்தான்கள் இன்று எம்மக்கள் மத்தியில் இன, மத, சமூக நல்லிணக்கம் பற்றி வேதம் ஓதுகின்றார்கள். அதே வேளை தமது பிரதேசங்களில் நடக்கும் பிரசாரங்களில் இத்தகைய நல்லிணக்கம் பற்றி மூச்சுவிடுவதில்லை. மாறாக தமது இன, மத, சமூக பாதுகாப்பு என்பதாகவே உரத்துக்கூறுகின்றார்கள். எமது பிரதேசத்தில் இணைந்து வாழ்வோம் என்று கூறுபவர்கள் தமது பிரதேசத்தில் தனித்துவம் காப்போம் என உரத்து உரைக்கின்றார்கள்.

இவர்களது இரட்டை வேடமும் இவர்கள் ஓதும் வேதமும் எம்மக்களிடம் இனியும் எடுபடாது. இனியும் இவ்வாறு வேதம் ஓதி எம்மக்களை ஏமாற்ற முடியாது. இறுதியில் ஏமாறப்போவது என்னவோ இந்த வேதம் ஓதிய சாத்தான்கள்தான். ஆகஸ்ட் 17 இல் இது அப்பட்டமாகத் தெரியும்.


 

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624939

Translate