(செங்கலடி சுபஜன்)
ஏறாவூர் தமிழ் மகா வித்தியாலயத்திற்கு புதிய அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரு வாரமாக ஏற்பட்டிருந்த சர்ச்சைக்கு சுமூகமான தீர்வு காணப்பட்டதால் பாடசாலைக் கல்விச் செயற்பாடுகள் நேற்று வியாழக்கிழமை முதல் வழமைக்கு திரும்பியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர். இப்பாடசாலைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் நேற்று வியாழக்கிழமை முதல் மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கு இடமாற்றப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டமும் கைவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் தொடர்பான சர்ச்சையையடுத்து தரம் 01 தொடக்கம் 12 வரையான மாணவர்கள் பாடசாலைக்கு செல்லாமல் பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு
வந்ததால் பாடசாலையின் கல்விச்
செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்து காணப்பட்டன. இதனையடுத்து இப் பாடசாலைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நேரடியாக விஜயம் செய்த மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். நிஸாம், வலயக் கல்விப்பணிப்பாளர், கோட்டக் கல்வி அதிகாரி மற்றும் பெற்றோர் ஆகியோருடன் நடத்திய பேச்சு வார்த்தைகளுக்கமைய இப் பாடசாலையில் ஏற்கனவே கடமையாற்றி வந்த அதிபர் இப் பாடசாலையில் கடமையாற்றத்தக்கவாறு நடவடிக்கைகளை மேற்கொண்டதுடன் புதிதாக நியமிக்கப்பட்ட அதிபர் உடனடியாக மஞ்சந்தொடுவாய் பாரதி வித்தியாலயத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பாடசாலையில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ளதாக பெற்றோர் தெரிவித்தனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக