புதன், 26 ஆகஸ்ட், 2015

சம்பூர் மக்கள் மீள்குடியேற்றத்திற்கு அமெரிக்கா உதவி

இலங்கையில் சமாதானம் மற்றும் அபிவிருத்தியை வலுப்படுத்துவதற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு கட்டமாக திருகோணமலை, சம்பூரில் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவைளிக்கும் வகையில் ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.


சம்பூர்; மீள் குடியேற்ற முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதாக செவ்வாய்க்கிழமை அமெரிக்கத் தூதரகத்தினால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

"மோதல் மற்றும் இடப்பெயர்வின் விளைவுகளை கடந்து வருவதற்கும், குடும்பங்கள் மற்றும் சமுதாயங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்துவதற்கும், கண்ணியத்துடன் வாழ்வதற்கும் நாடு முழுவதிலும் உள்ள இலங்கையர்களுக்கு உதவுவதே எமது இலக்காகும்" என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேஷப் தெரிவித்துள்ளார்.

இந்த உதவியின் முதற்கட்டமாக 100,000 அமெரிக்க டொலர்கள் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க நிறுவனத்தினால் (ருளுயுஐனு) வசதியளிக்கப்பட்டு புதிதாக மீள் குடியேற்றப்படவுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளை எட்டுவதற்கான சேவைகள் மற்றும் வழிகளை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

இடம்பெயர்ந்த குடும்பங்களிலுள்ள மாணவர்களின் கல்விக்காக உதவும் வகையில் சம்பூரில் இரண்டு பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கு மற்றுமொரு உதவித் தொகையாக 900,000 அமெரிக்க டொலர்கள் ஐக்கிய அமெரிக்க தூதரகம் ஊடாக வழங்கப்படவுள்ளது.

முன்னர் மோதலினால் பாதிக்கப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்தவர்களுக்காக பாடசாலைகள், வைத்தியசாலைகள், சந்தைகள் மற்றும் பல்வேறு வசதிகளை அமைத்துக் கொடுக்கும் அமெரிக்காவின் பரந்த முயற்சிகளின் ஒரு கட்டமாக இந்த ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி வழங்கப்படுகின்றது.

இலங்கை முழுவதிலும் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் தொழில் முனைதல் சந்தர்ப்பங்களை வழங்குவதற்கு உதவுதல் என்பன ஏனைய திட்டங்களில் உள்ளடங்குகின்றன என்றும் அந்த  ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate