திங்கள், 10 ஆகஸ்ட், 2015

வடக்கு கிழக்கில் தனியான மாநிலமே தமிழ் மக்களின் எதிர்ப்பார்ப்பு: சம்பந்தன்

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் மக்களுக்கான தனியான மாநிலமே தமிழ் மக்களது எதிர்பார்ப்பு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவோருக்கு ஆதரவு திரட்டும் வகையில் களுவாஞ்சிக்குடியில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தமிழ் பேசும் மக்களுக்கான தனியான மாநிலத்தைப் பெறும் வகையில் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டு தமது பலத்தினை வெளிப்படுத்தும் காலம் தற்போது ஏற்பட்டுள்ளது.
நடைபெறவிருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாக களமிறங்கியிருக்கின்ற 8 வேட்பாளர்களும் ஒன்றுமையுடன் செயற்பட்டு மக்களைத் தெளிவூட்டவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு ஒருபோதும் துரோகம் செய்யாது. தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நாம் நன்கு அறிவோம். அவர் ஒரு ஜனநாயகவாதி. சம்பூர் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பலதடவை ஜனாதிபதியுடன் பேசியதன் காரணமாக அந்தப் பிரச்சினைக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
ஐ.நா. அறிக்கை இவ்வருடம் செப்டம்பர் மாதம் வெளிவரவுள்ளது. நாட்டில் நல்லிணக்கம், புரிந்துணர்வு ஊடாக எமது பிரச்சினைக்குத் தீர்வு வரவேண்டும். எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களது நிலைப்பாட்டினை தெளிவாக எடுத்துக் கூறியிருக்கின்றோம்.
மக்கள் வன்முறைகளை விரும்பவில்லை. அவர்கள் பட்ட வேதனைகளுக்கு தீர்வுகிடைக்க வேண்டும். இதுதான் எமதும் சர்வதேசத்தினதும் நிலைப்பாடு. அதுமட்டுமின்றி விசுவாசமான நல்லிணக்கமும் புரிந்துணர்வும் இனங்களுக்கிடையில் ஏற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate