முன்னாள் பிரதியமைச்சர் வினாயகமூர்த்தி முரளீதரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருப்பதனூடாக கூட்டமைப்பிற்கு மக்கள் ஆதரவு குறையுமே தவிர அதிகரிக்காது என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனருமான பி.அரியநேத்திரன் தெரிவித்தார்.
கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக கருணா அறிவித்துள்ள நிலையில், அது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முரளீதரன் மக்கள் செல்வாக்கு இல்லாதவர். தமிழ் மக்கள் அவரை கண்டு கொள்ளவில்லை. அதே போல் எந்தக் கட்சியும் அவரை சேர்த்துக்கொள்ளவுமில்லை. அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார்.
இவரின் ஆதரவின்றி பல தேர்தல்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி பெற்றுள்ளது. அதேபோன்று இம்முறையும் வெல்வோம். ஆனால் கருணா இப்போதாவது கூட்டமைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதை நாங்கள் வரவேற்கின்றோம். அவரது தமிழ் தேசிய கூட்டமைப்பிறகான ஆதரவு என்பது காலம் கடந்த ஞானோதயமாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக