திங்கள், 24 ஆகஸ்ட், 2015

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறும் சாதனை வீரர் சங்கா!


இலங்கையணியின் துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்காரா டெஸ்ட் அரங்கில் தனது கடைசி இனிங்ஸில் நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை விளையாடி சாதனை வீரர் சங்கா ஓய்வு பெற்றுள்ளார்.
'மிகவும் விவேகமானதும் திறமையான துடுப்பாட்டக்காரராக வர்ணிக்கப்படும்' குமார் சங்கக்காரா தனது 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளையும் வெற்றிகளையும் நாட்டுக்காக ஈட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பு பி. சரவணமுத்து விளையாட்டு திடலில் நேற்று (23) நடைபெற்ற போட்டியில்  தனது கடைசி ஆட்டத்தை ஆட வந்தார் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார, இதன் போது சிறிய வயதுடைய கிரிக்கெட் வீரர்கள் சங்கா வரும் பாதை நெடுகிலும் துடுப்பு மட்டையை உயர்த்திப் பிடித்து மைதானத்துக்குள் நுழைந்த சங்காவை வரவேற்றனர். இந்திய வீரர்கள் இலங்கையணி வீரர்கள் என இரு சாராரும் சங்காவுக்கு மரியாதையளித்து அரங்கிற்குள் வரவழைத்தமை கண்கொள்ளாக் காட்சியாக விளங்கியது.

சர்வதேச போட்டியில் இதுதான் அவரது கடைசி இன்னிங்ஸ் என்பதால் ரசிகர்கள் மத்தியிலும் ஒருவித சோகம் குடிகொண்டது. சங்கா களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடினார். 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 18 ஓட்டங்களைப் பெற்றார். ஆனால், தான் சந்தித்த 18 ஆவது பந்தில் முரளி விஜயிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இந்த விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். இத்துடன் சங்கக்கார சர்வதேச போட்டியில் இருந்து விடைபெற்றார்.

விடைபெற்றுச் செல்லும் போது இந்திய அணி வீரர்களனைவரும் சாதனை நாயகனை கைகொடுத்து வழியனுப்பினர். பின்னர் விடைபெற்றுச் சென்ற சங்கா தனது ருவிட்டர் தளத்தில் கருத்து வௌியிடும் போது

"எனது நாட்டுக்காக எமது ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவதை நான் மிகப் பெரும் கௌரவமாக நினைக்கின்றேன்...என்மீது காண்பித்த அனைத்துவிதமான அன்புக்கும் நன்றி... " என தெரிவித்துள்ளார்.  ஒருநாள் சர்வதேச போட்டிகளிலிருந்து (ODIs) சங்கா ஏற்கனவே ஓய்வு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate